Last Updated : 19 May, 2018 07:33 AM

 

Published : 19 May 2018 07:33 AM
Last Updated : 19 May 2018 07:33 AM

வேட்டை தாகம் தீராத லயோனல் மெஸ்ஸி

2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்று தோல்வியைத் தழுவி கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது, 2015 கோப்பா அமெரிக்கா இறுதியில் சிலி அணியிடம் பெனால்டியில் தோல்வி அடைந்து கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது மட்டுமல்ல... 2016 கோப்பா அமெரிக்காவின்போதும் மெஸ்ஸி இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் மீண்டும் பெனால்டியில் தோல்வி கண்டார்.

இதனால்தான் அவர் “நான் அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன், 4 இறுதிப் போட்டிகளில் இருந்தும் சாம்பியன் ஆக முடியவில்லை, இது எனக்கும் அணிக்கும் கடினமான தருணம். அர்ஜென்டினாவுக்கு விளையாடுவது என்பது முடிந்துவிட்டது” என்ற விரக்தியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியின் முடிவில் கனத்த இயத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

ஆனால் சில மாதகால இடைவெளியில் அவர், தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் கண்டார். 30 வயதான மெஸ்ஸிக்கு இது 4-வது உலகக் கோப்பை தொடர். மெஸ்ஸி விளையாடிய 3 உலகக் கோப்பையிலும் அவரது கனவை சிதைத்தது ஜெர்மனி அணிதான். 2006 மற்றும் 2010-ல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கால் இறுதியுடன் மூட்டை கட்ட வைத்த ஜெர்மனி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் பேரிடி கொடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல்கள் அடிக்கப்படாத நிலையில் கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் 113-வது நிமிடத்தில் மரியோ கோட்ஸே அடித்த கோல் அர்ஜென்டினா அணியின் கனவை நிர்மூலமாக்கியது. எனினும் கடைசி கட்டத்தின் அர்ஜென்டினாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடவுளை வேண்டிக்கொள்ள மேஜிக் மெஸ்ஸியின் காலில் இருந்து மாயங்கள் நிகழும் என எதிர்பார்த்த நிலையில், அவரோ பந்தை கோல் கம்பத்துக்கு மேலே உதைக்க ரசிகர்களின் மனம் நொறுங்கியது.

இந்த ஆட்டத்தில் முன்னதாக 47-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்திருந்த வாய்ப்பையும் மெஸ்ஸி விரயமாக்கியிருந்தார். ஒட்டுமொத்தத்தில் அன்றைய நாள் மெஸ்ஸிக்கான நாளாக அமையவில்லை. அந்த உலகக் கோப்பையில் கோல்டன் பந்து விருதை மெஸ்ஸி பெற்றாலும் அது சுமையாகவே இருந்தது. ஏனெனில் அவரது சிறந்த ஆட்டம் அன்றைய நாளில் வெளிப்படவில்லை. இதேபோல்தான் 2016-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் மெஸ்ஸி கோல் அடிக்க தவற கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கோப்பை நழுவியது.

பார்சிலோனா அணிக்காக கோல் மழை பொழியும் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவிலான தொடர்களில் அதைத் செய்வதில்லையென்று என்று ரசிகர்கள் பொருத்தமற்ற எதிர்மறை கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும் உண்டு. ஆனால் உண்மையை கூறவேண்டுமெனில் மெஸ்ஸிக்கு பார்சிலோனாவும், அர்ஜெடின்னாவும் வேறு வேறு இல்லை என்பது அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொண்டவர்களுக்கு புரியும். “பார்சிலோனா அணி இதயம் என்றால் அதன் ஆத்மா அர்ஜென்டினா” என்ற கோட்பாட்டிலேயே மெஸ்ஸியின் இயக்கம் சுழன்று கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் கடைசி கட்டங்களில் அர்ஜென்டினா அணி சில ஆட்டங்களை டிராவில் முடித்திருந்ததால் பெரும் சிக்கலை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில் ஈக்வேடார் அணியை வீழ்த்தினால் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது அர்ஜென்டினா. ஈக்வேடாருக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்ட குயிட்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அந்த அணி முதல் 40 விநாடியிலேயே கோல் அடித்து மிரட்டியது. ஆனால் மந்திரநாயகன் மெஸ்ஸி அசரவில்லை. அனைவராலும் நம்பமுடியாத வகையிலான அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி உலகக்கோப்பைக்குள் அழைத்துச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் அவர், அடித்த ஒவ்வொரு கோல்களும் அவர் ஒரு ஜீனியஸ் என்பதை உலகுக்கு காட்டியது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க தவறியிருந்தால் 1970-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக உலகக் கோபைக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியிருக்கும் அர்ஜென்டினா.

ஆனால் அந்த நிலைமைக்கு செல்லவிடவில்லை மெஸ்ஸி. 32 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் தனது தேசத் தின் கனவை மீண்டும் தன் தோள்களில் சுமக்கிறார் மெஸ்ஸி. கடந்த 10 ஆண்டுகளாக தேசத்துக்கு மகு டம் சூட்ட போராடி வரும் மெஸ்ஸியின் தீராத வேட்டை தாகம் தீருமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இந்த ரஷ்ய உலகக் கோப்பையின் வாயிலாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x