Published : 31 May 2018 07:45 AM
Last Updated : 31 May 2018 07:45 AM

புரோ கபடி லீக் தொடர்: ஈரான் வீரர் அட்ராகலிரூ.1 கோடிக்கு ஏலம்

புரோ கபடி தொடரின் 6-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஈரான் வீரர் ஃபாஸெல் அட்ராகலியை ரூ.1 கோடிக்கு யு மும்பா அணி ஏலம் எடுத்தது.

புரோ கபடி தொடரின் 6-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான வீராகள் ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. முதலில் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் ஈரானைச் சேர்ந்த ஃபாஸெல் அட்ராகலியை ரூ.1 கோடிக்கு யு மும்பா அணி ஏலம் எடுத்தது. 26 வயதான அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலம் தொடங்கியுடன் அவரை வளைத்துப் போட ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா அணிகள் இடையே கடும் போராட்டம் நிலவியது.

கடந்த ஆண்டு குஜராத் பார்ச்சூன்ஸ் அணிக்கு கேப்டனாக ஃபாஸெல் அட்ராகலி விளையாடியிருந்தார். இவரது தலைமையில் குஜராத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. ஃபாஸெல் அட்ராகலியை குஜராத் அணி தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி அவரை அணியில் நீடிக்கச் செய்வதில் ஆர்வம் காட்டாத நிலையில் யு மும்பா அணி ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் ஃபாஸெல் அட்ராகலி.

கடந்த சீசனில் நித்தின் தோமரை, யுபி யோதாஸ் அணி அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. டிபன்டரான ஃபாஸெல் அட்ராகலி 56 ஆட்டங்களில் விளையாடி 152 புள்ளிகள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஈரான் வீரரான அப்சார் மோகஜர்மயானியை ரூ.76 லட்சத்துக்கு தெலுகு டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது. டிபன்டரான இவரும் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக விளையாடியிருந்தார். தென் கொரியாவை சேர்ந்த ரைடரான ஜங் ஹூன் லீயை ரூ.33 லட்சத்துக்கு ஹரியாணா அணி ஏலம் கேட்டது. ஆனால் அவரை அதே விலைக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x