

சென்னை: மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதி ரூ.4 லட்சமாக உயத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அறிவிப்புகளை துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:
> சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ.25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும்.
> சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும். 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.
> டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
> இந்தியாவிலேயே முதல்முறையாக ரூ.12 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். மேலக்கோட்டையூர் அருகே SDAT பிரத்யேக ஒலிம்பிக் Bicycle Motocross (BMX) ஓடுபாதை அமைக்கப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
> தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும், விளையாட்டு அரங்கங்களும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
> தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில், முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் ரூ.66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
> தென் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில்,மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool- உடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்படும். மேலும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.
> ரூ.10 கோடியில், மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
> தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காக, அரியலூர், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாக தரம் உயர்த்தப்படும்.
> களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழகத்தின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் சீரிய முயற்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
> தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட Athlete Management System (AMS) எனும் மென்பொருள் மேம்படுத்தப்படும். இதன்மூலம், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அதிகளவிலான பதக்கங்கள் வெல்வது உறுதி செய்யப்படும்.
> மேலக்கோட்டையூரில் ஃபென்சிங், பேட்மிண்டன், சைக்கிளிங், ஆர்ச்சர், டேபிள் டென்னிஸ்; நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ்; வேளச்சேரியில் ஸ்விம்மிங், ஜிம்னாஸ்டிக் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மேம்படுத்தப்படும்.
> SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 2,330-லிருந்து 2,600 ஆக உயர்த்தப்படும். நாள் ஒன்றுக்கான உணவுப்படி ரூ.250-லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படும். சீருடை மானியத் தொகை ரூ.4000-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படும். உபகரண மானியத் தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.
> விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள், முகாம்கள் நடத்த விளையாட்டு விடுதிகளுக்கு ரூ.5 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
> மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளத்துடன் கூடிய புதிய நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.
> ஹாக்கி, கைப்பந்து, கபாடி விளையாட்டு பயிலும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள், கோவை மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும்.
> இளைஞர்களை நல்வழிப்படுத்த புதிய இளைஞர்கள் கொள்கை அறிமுகப்படுத்தப்படும்.
> புதிய விளையாட்டு வீரர்களை அடையாளம் காண உதவும் உயரிய புதிய விளையாட்டுத் திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்பட்டு, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
> ஒலிம்பிக் விளையாட்டுக்கான மானியம் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்களுக்கான மானியம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
> தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்திலிருந்து ரூ.28 லட்சமாக உயர்த்தப்படும். நவீன ரக துப்பாக்கிகள் வாங்கி நிதி உதவி அளிக்கப்படும்.
> 2024ம் ஆண்டு முதல் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்களுக்கு ரூ.50 லட்சம் தொடர் செலவினமாக வழங்கப்படும்.
>வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதி ரூ.4 லட்சமாக உயத்தப்படுகிறது.
> மாநிலத்தின் உள், வெளி விளையாட்டரங்கங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
> தலைசிறந்த 10 விளையாட்டு வீரர்கள் புதிய பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவர். உயரிய நிலையிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்ல பயிற்சி அளிக்கப்படும்.