

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன் - நவ்னீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்னீத் 4 ரன்களில் போல்டானார்.
அடுத்து வந்த பர்கட் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். 10ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவீந்தர்பால் சிங் டக் அவுட்டாக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது கனடா.
நிலைத்து ஆடி அரைசதம் கடந்த ஆரோன் ஜான்சன் 52 ரன்னில் போல்டானார். சாத் பின் ஜாபர் 10 ரன்களில் விக்கெட்டாக 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா 91 ரன்களைச் சேர்த்தது. கலீம் சனா 13 ரன்களிலும், தில்லன் ஹெய்லிகர் 9 ரன்களிலும் களத்தில் இருக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா 106 ரன்களை சேர்த்தது.
107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக முகமது ரிஸ்வான் மற்றும் சாம் அயூப் இறங்கினர். இதில் ரிஸ்வான் 52 பால்களுக்கு 52 ரன்கள் ஆடி அணிக்கு வலு சேர்த்தார். சாம் அயூப் 12 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்த நிலையில், ஷ்ரேயஸ் மோவாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய அணியின் கேப்டன் பாபர் அஸம், 33 பால்களுக்கு 33 ரன்கள் அடித்து ஸ்கோரை ஏற்ற உதவினார். எனினும் 14 ஓவரில் தில்லன் ஹெய்லிகர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
ஃபகர் ஸமான் 4 ரன்கள், உஸ்மான் கான் 2 ரன்கள் என அடித்த நிலையில், 17.3 ஓவர்களில் கொடுக்கப்பட்ட இலக்கை தாண்டி 107 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முடிவில் ரிஸ்வான் மற்றும் உஸ்மான் இருவரும் களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.