Published : 30 May 2024 05:48 PM
Last Updated : 30 May 2024 05:48 PM

“நான் மிகவும் ‘நெர்வஸ்’ ஆக இருந்தேன்” - நினைவலை பகிர்ந்த விராட் கோலி

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் போட்டியில் அயர்லாந்தை சந்திக்கவுள்ள நிலையில், விராட் கோலி 2011 ஐசிசி உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் தான் ஆடியதைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

அது 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை. வங்கதேசத்துக்கு எதிராக அங்கு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியாகும். அப்போது சச்சின், சேவாக், யுவராஜ், ரெய்னா, தோனி போன்ற சீனியர் வீரர்களுடன் அணியின் இளம் வீரராக கோலி ஆடினார். இப்போது கோலி ஆடுவது 9வது உலகக் கோப்பையாகும். அதாவது 4 ஒருநாள் உலகக் கோப்பை, 5 டி20 உலகக் கோப்பை.

இந்நிலையில் அவர் தன் ஐசிசி உலகக் கோப்பை அறிமுகப் போட்டியை நினைவுகூர்ந்த போது, “நான் தான் அணியின் இளம் வீரர். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் கிரேட் பிளேயர்களுடன் களமிறங்கினேன். ஆம், நான் பதற்றமாகவே இருந்தேன். உண்மையாகவே... பொய் கூறவில்லை.

உலகக் கோப்பைப் போட்டி என்னும் போது ஒரு வித்தியாசமான சூழ்நிலையும் உற்சாகமும் இருந்தது உண்மைதான். அதை நான் உணர முடிந்தது. போட்டிக்கு முன்பாக நான் நெர்வஸ் ஆக இருந்தேன். இது நல்லதுதான், ஏனெனில் ஒரு எச்சரிக்கை தரும் சூழ்நிலையில் இறங்க நம் உடல் தயாராகிறது என்று பொருள். அந்தத் தருணத்தில் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அதனால்தான் பதற்றம் எனக்கு உதவியாக இருந்தது. அதாவது பதற்றம் என் எச்சரிக்கை உணர்வை கூர்மைப்படுத்தியது. இதனால் என் திட்டத்தைத் துல்லியமாக செயல்படுத்த முடிந்தது” என்றார் கோலி.

அந்தப் போட்டி இந்திய அணிக்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில் ரசிகர்களிடையே வங்கதேசம் மீது ஒரு கொதிப்பு இருந்தது. 2007 உலகக் கோப்பையில் இந்தியா அவர்களிடம் தோற்றபோது அவர்கள் ஏச்சும் பேச்சும் கேலிகளும் ஊடகங்களில் வளையவந்தன. அதனால் வங்கதேச அணியை தோற்கடிப்பது மட்டுமல்ல நோக்கம், வங்கதேசம் அசிங்கமாகத் தோற்க வேண்டும் என்ற மனநிலை இருந்தது.

சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள், விராட் கோலி 83 பந்துகளில் சதம். இந்திய அணி 370/4. வங்கதேச அணி 283/9 என்று தோல்வி அடைந்தது. வங்கதேச மண்ணில் அந்த அதிக சப்தம் எழுப்பும் ரசிகர்கள் முன்னிலையில் 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்தது இந்திய அணி. முனாப் படேல் 4 விக்கெட். ஜாகீர் கான் 2 விக்கெட்.

பிறகு நடந்தது வரலாறு, தோனி தலைமையில் இந்திய அணி 2வது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. விராட் கோலி இப்போது அந்தப் போட்டியை கரீபியனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தருணத்தில் நினைவுகூர்வதில் காரணமில்லாமலில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x