Published : 23 May 2024 10:23 AM
Last Updated : 23 May 2024 10:23 AM

வங்கதேச அணிக்கு ஷாக் தந்த ‘இந்திய யு-19 WC வீரர்’- வரலாறு படைத்த யுஎஸ்ஏ!

ஹர்மீத் சிங் | படம்: எக்ஸ்

டெக்ஸாசில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரையர் வியூ மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20 போட்டியில் வங்கதேச அணியை யுஎஸ்ஏ டி20 அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

முன்பு ஒருமுறை அயர்லாந்தை வெற்றி பெற்ற யுஎஸ்ஏ, இப்போது ஐசிசி முழு உறுப்பினர் அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

வங்கதேச அணிக்கு நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, யுஎஸ்ஏ அணிக்கு மொனாங்க் படேல் தலைமை தாங்கினர். இந்தப் போட்டியில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலுமே கலக்கிய இடது கை வீரர் ஹர்மீத் சிங், முன்னாள் இந்திய யு-19 உலகக் கோப்பை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 1992-ல் மும்பையில் பிறந்தவர். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் யுஎஸ்ஏ அணிக்காக பந்து வீச்சில் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு பேட்டிங்கில் இறங்கி 13 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களை விளாசி யுஎஸ்ஏ அணியின் வெற்றிக்கு உதவினார்.

வங்கதேச அணி முதலில் பேட் செய்து 20 ஒவர்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலக்கை விரட்டிய யுஎஸ்ஏ, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து ஆடியவர் முன்னாள் நியூஸிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸுக்கு ஆடியுள்ளார். ஷாகித் அஃப்ரீடியின் 37 பந்துகள் ஒருநாள் கிரிக்கெட் அதிரடி சத உலக சாதனையை முதன் முதலில் உடைத்தவர் கோரி ஆண்டர்சன். இவர் 36 பந்துகளில் சதம் அடித்தார். அவர், இந்தப் போட்டியில் 25 பந்துகளில் 34 ரன்களை 2 சிக்ஸர்களுடன் விளாசினார்.

இலக்கை விரட்டும் போது யுஎஸ்ஏ அணிக்கு 20 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கடினமான சூழ்நிலை. அப்போது 5 பந்துகளை ஓட்டிய ஹர்மீத் சிங் பிறகு கடினமான முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் இரண்டு நேர் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்த ஓவரில் ஷோரிபுல் பந்தை நேராக சிக்ஸருக்குப் பறக்க விட்டார். பிறகு 18-வது ஓவர் முடிவில் ஒரு பவுண்டரி விளாசினார். ஹர்மீத் சிங் அதிரடியால் அமெரிக்கா அணி 2 ஓவர்களில் 31 ரன்களை எடுத்தது.

அடுத்த 12 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 24 ரன்கள். அப்போது கோரி ஆண்டர்சன் முஸ்தபிசுரை ஒரு சிக்ஸர் விளாசினார். பிறகு மஹமுதுல்லாவையும் ஒரு சிக்ஸர் விளாசினார். கடைசி 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட ஹர்மீத் சிங் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி யுஎஸ்ஏ அணிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

யார் இந்த ஹர்மீத் சிங்? - ஹர்மீத் சிங்கின் இயற்பெயர் ஹர்மீத் சிங் பத்தன். இப்போது அவருக்கு 31 வயது. இடது கை பேட்டர் மற்றும் ஸ்பின்னர். இவர் ஒரு ஆல்ரவுண்டர். இவரது பந்துவீச்சை ஒருமுறை முன்னாள் இந்திய லெஜண்ட் வீரர் திலிப் சர்தேசாய் பிஷன் சிங் பேடியுடன் ஒப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக ஆடினார்.

இதில் 2010-ல் சோபிக்கவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் ஆடிய ஹர்மீத் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யு-19 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை இவரது சிக்கன விகிதம் 3.02 தான். அந்த யு-19 உலகக் கோப்பையை இந்தியா வென்ற போது ஹர்மீத் சிங் இந்திய அணியின் தூணாக கருதப்பட்டார்.

9 வயது முதலே இவரது திறமையைக் கண்டு பிடித்த முன்னாள் மும்பை அணி ஸ்பின்னர் பத்மாகர் ஷிவால்கர் மற்றும் பிரவீன் ஆம்ரே, இவரை வளர்த்தெடுத்தனர். யு-16, யு-19 மும்பை அணியை வழிநடத்தியவர். இமாச்சலுக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

2010-11 சீசனில் தமிழ்நாடு அணிக்கு எதிராக தன் 3-வது போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்த சீசனில் இவரை ஒதுக்கினர். அதற்கான காரணம் இன்று வரை புதிர்தான். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரராக இருந்தார்.

31 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், 733 ரன்களையும் எடுத்துள்ளார். 19 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 21 விக்கெட்டுகளையும், 155 ரன்களையும் எடுத்துள்ளார். இவர் 5 டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். மொத்தமாக 12 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு ஷாக் கொடுத்துள்ளார். 13 பந்துகளில் 34, அதுவும் சிஎஸ்கே புகழ் முஸ்தபிசுர் ரஹ்மானை 2 நேர் சிக்ஸர்கள் விளாசி 20 பந்துகளில் 50 ரன்கள் என்ற நிலையை வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x