Published : 21 Apr 2018 05:24 PM
Last Updated : 21 Apr 2018 05:24 PM
இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தை இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் என்று பலரும் வர்ணித்தது நினைவிருக்கலாம்.
கங்குலி கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராக ஏற்றுக் கொண்டார், ஆனால் கிரெக் சாப்பல் கங்குலியின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்து அவரை தலைமைப்பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தார்.
2005 ஜிம்பாப்வே தொடரில்தான் கங்குலியை நீக்க வேண்டுமென்று கிரெக் சாப்பல் முடிவுக்கு வந்தார் இதனை சேவாக் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவாக், கங்குலிக்கு தெரியாததை தான் போட்டுடைத்ததாகத் தெரிவித்தார்.
அப்போது ஜிம்பாப்வேயில் ஒரு மேட்சின் போது சேவாக் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு அவர் ஓய்வறைக்கு வந்த போது கிரெக் சாப்பல் ஒரு இ-மெயில் தட்டிக் கொண்டிருந்தார். இதைச் சேவாக் பார்த்து விட்டார்.
“வாஷ் ரூமுக்கு அருகில் அவர் கணினியின் முன் அமர்ந்திருந்த போது நான் என் வயிற்று உபாதை பற்றி அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் பிசிசிஐ-க்கு இ-மெயில் செய்து கொண்டிருந்தார்.
அவர் என்ன டைப் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது மிகவும் சீரியசான விவகாரம் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. நான் உடனேயே கங்குலியிடம் இந்த இ-மெயில் விவகாரத்தைத் தெரிவித்தேன்.
என்னை தொடக்க வீரராக மாற்றிய கங்குலிக்கு நான் நன்றி தெரிவித்தேன். சதம் அடித்த உடன் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை தொடக்க வீரராகக் களமிறக்கிய கங்குலிக்கு நன்றி தெரிவித்து பலமுறை அவரை ஆரத்தழுவியுள்ளேன்.
அவர் மிகவும் எளிமையானவர், தன்னுடைய இடத்தை தியாகம் செய்த ஒரே கேப்டன் கங்குலிதான்” என்றார் சேவாக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT