Published : 23 Apr 2018 06:13 PM
Last Updated : 23 Apr 2018 06:13 PM

சிஎஸ்கேயிடம் தொடங்கிய கடைசி ஓவர் தோல்விகள்: நொந்து நூலான மும்பை கேப்டன் ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் ஒரு போட்டியில் நெருக்கமாக வந்து தோல்வி தழுவி நொந்து நூலானது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ ஆரம்பித்து வைக்க நேற்று ராஜஸ்தான் அணியின் கவுதம் 11 பந்துகளில் 33 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்ததில் ராஜஸ்தான் அணி எதிர்பாரா வெற்றியைப் பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-ல் 4 போட்டிகளில் கடைசி ஓவர் தோல்விகளை சந்தித்துள்ளது.

பேட்டிங்கில் 167 ரன்களையே மும்பை எடுத்ததற்குக் காரணம் ரூ.7.2 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்த ஜோஃப்ரா ஆர்ச்சர், இவர் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவர் ஒரு புறம் என்றால் பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய கவுதம் ரூ.6.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ஜோப்ரா ஆர்ச்சரின் 3 விக்கெட்டுகளும் ஆட்டத்தின் 19வது ஓவரில் வந்தது. இது மும்பை இந்தியன்ஸை பேட்டிங்கில் காலி செய்ய, பவுலிங்கின் போது கவுதம் கடைசியில் 8-ம் நிலையில் இறங்கி சாதித்தார், அவற் இறங்கும் போது 17 பந்துகளில் 43 ரன்கள் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவை. அப்போதுதான் 4 பவுண்டரி 2சிக்சருடன் அவர் 33 ரன்கள் விளாசினார், இந்த 2 நிகழ்வுகளும் மும்பை இந்தியன்சை புதைத்தது.

பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் 82 பந்துகளில் 129 ரன்களை விளாசி 15 ஓவர்களில் 135 என்ற ஸ்கோரில் வைத்துச் சென்றால் ரோஹித் சர்மா, குருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா என்று அனைவரும் விறுவிறுவென்று நடையைக் கட்டினர். இதனால் நொந்து நூலான ரோஹித் சர்மா கூறியதாவது:

“மீண்டுமொரு ஜீரணிக்க முடியாத தோல்வி. முடிவில் நாங்கள் ஆட்டத்தில் வெற்றிபெறும் நிலையிதான் இருந்தோம், ஆனால் ராஜஸ்தான் அணிக்கு பாராட்டுகள். இந்தப் பிட்சில் ஓவருக்கு 10 ரன்கள் எடுப்பது கஷ்டம், அதனால்தான் 180-190 ரன்களையாவது நாங்கள் எடுத்திருக்க வேண்டும். நல்ல தொடக்கத்தை வீணடித்தோம். 2-3 தடவை இப்படி ஆடியிருக்கிறோம்.

ஏற்கெனவே இதுபற்றி பேசியும் இப்படி ஆகிறது. பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் சாமர்த்தியம் தேவை. அவர்கள் பவுலர்களுக்கு பாராட்டுக்கள். நெருக்கமான போட்டிகளில் தோற்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால்தான் பவுலர்களை அதிகம் நாங்கள் விமர்சிப்பதில்லை. எங்கள் பேட்டிங்தான் எங்களைக் கைவிட்டது. 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.” என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x