Published : 21 Apr 2018 08:06 PM
Last Updated : 21 Apr 2018 08:06 PM

கடும் பாதுகாப்புகளையும் மீறி தோனியின் காலில் விழுந்த ரசிகர்: சாதித்த நிம்மதியுடன் சென்றார்

 

புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் போது, கடும் பாதுகாப்புகளை மீறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் காலில் விழுந்து வணங்கிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

புனே நகரில் நேற்று ஐபிஎல்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டம் தி்ட்டமிட்ட படி சென்னையில் நடந்திருக்க வேண்டியது. ஆனால், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பை அமல்படுத்தக்கோரி நடந்த போராட்டம்காரணமாக, போட்டிகள் அனைத்தும் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, சிஎஸ்கே அணி நிர்வாகம் விசில்போடு எக்ஸ்பிரஸில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை புனே நகருக்கு சொந்த செலவில் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், அரங்கில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடையும், மஞ்சள் கொடியுமாகத் தெரிந்தது.

ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழையா வகையிலும், சென்னை போட்டியைப் போல் ஏதேனும் கொடி, பேனரை காட்டிவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடும் பலமாக செய்யப்பட்டு இருந்தது. போலீஸார் தீவிரமாக ரோந்து வந்த வண்ணம் இருந்தனர்.

போட்டியின்போது 2வது விக்கெட்டுக்கு பேட் செய்த வந்த சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்து சென்றபோது, அடுத்ததாக கேப்டன் தோனி களமிறங்கினார். அப்போது, அரங்கில் இருந்த ரசிகர் ஒருவர் கடும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்தார்.

தோனி நடந்து வந்து கொண்டிருந்த நிலையில், அவரை மறித்த அந்த ரசிகர், தோனியில் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை தோனி தூக்கிவிட்டு சில வினாடிகள் பேசினார்.

அதன்பின் தோனி நடந்து செல்லும்போது அவருடன் பேசிக்கொண்டே சென்ற அந்த ரசிகர் அதன்பின் மீண்டும் தனது இருக்கைக்கு சென்றார். அப்போது, எதையோ சாதித்துவிட்ட உணர்வுடன், வானத்தைப் பார்த்துக்கொண்டே, நெஞ்சில் கைவைத்துக்கொண்டு நன்றி தெரிவித்துச் சென்றார். அனைத்து பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி ரசிகர் ஒருவர் தோனியை பார்க்கச் சென்று, ஆசிபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தோனியிடம் ரசிகர் ஆசி பெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்தது. அப்போது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி ரசிகர் ஒருவர் தோனி காலில் விழுந்து வணங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x