Published : 08 May 2024 01:10 PM
Last Updated : 08 May 2024 01:10 PM

T20 WC | ‘இந்திய அணியின் 2 இளம் மேட்ச் வின்னர்கள்’ - ரவி சாஸ்திரியின் பீடிகை

ரவி சாஸ்திரி | கோப்புப்படம்

கடைசியாக கடந்த 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. அதன் பிறகு இன்னும் 2-வது டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை. வீழ்ச்சியடைந்து கொண்டே செல்லும் மேற்கு இந்தியத் தீவுகளே 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்று விட்டது. ஆனால், பண மழை பொழியும் ஐபிஎல் கிரிக்கெட்டை கொண்டிருக்கும் இந்தியாவினால் 2-வது டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, எதிர்வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 2 வீரர்களை மேட்ச் வின்னர்களாக அடையாளம் கண்டுள்ளார்.

2007 எடிஷனின் சாம்பியனான இந்திய அணி இந்த முறை பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுடன் ‘குரூப்-ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் அயர்லாந்துக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா ஆடுகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இந்திய அணியின் வாய்ப்புகள் குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்தது. “நீங்கள் கவனிக்க வேண்டியது அணியில் இடம்பெற்றுள்ள இரண்டு வீரர்களை. அவர்கள் இருவரும் இடது கை ஆட்டக்காரர்கள். இருவரும் தங்களது முதல் உலகக் கோப்பையை விளையாடுகிறார்கள்” என்று பீடிகை போட்டார்.

“அதில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரைப் பற்றி நமக்கு நிறைய தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அசாதாரணமாக ஆடினார். தொடக்கத்தில் இறங்கி சரவெடி ஷாட்களைப் பறக்க விட்டார். இடது கை பேட்டர், பயமறியாதவர், ஷாட்களை எடுத்த எடுப்பிலேயே ஆடக்கூடியவர், ஆடி வருபவர்.

ஆனால், மிடில் ஆர்டரில் ஒருவர் இருக்கிறார். அவரது ஆட்டத்தை கூர்ந்து நோக்குங்கள். ஏனெனில், அவர் டி20 சரவெடி வீரர். அவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்பவர். மேட்ச் வின்னர். சும்மா கேளிக்கைக்காக சிக்ஸ் அடித்துப் பழகுபவர். ஸ்பின் பவுலிங்கை கொன்று எடுத்து விடுவார்.

பந்துகளை பெரிய தீவிலிருந்து சிறிய தீவிற்கு பறக்க விடுபவர். பெரிய சிக்ஸர்களை அடிப்பார். நீண்ட தூரம் பந்துகளை பறக்க விடுவார். நான் சொன்னது போல சுழற்பந்து வீச்சை வெறியாட்டம் போட்டு கொன்று விடுவார். அவர்தான் ஷிவம் துபே. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பலவீனமானவர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அந்தப் பலவீனத்தையும் சரி செய்து விட்டார் என்றே நான் கூறுவேன்.

எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விட்டார். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 5 அல்லது 6-ம் இடத்தில் இவர்தான் முக்கியமான பேட்டர். 20-25 பந்துகளில் போட்டியையே மாற்றும் திறமை ஷிவம் துபேவிடம் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 200-க்கு அருகில் உள்ளது. ஷிவம் துபே ஆட்டத்தை உலகக் கோப்பையில் பாருங்கள்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x