Last Updated : 08 Apr, 2018 06:08 PM

 

Published : 08 Apr 2018 06:08 PM
Last Updated : 08 Apr 2018 06:08 PM

காவிரி போராட்டம் எதிரொலி: சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றம்?

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தபின், அந்தத் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழக்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடயே வரும் 10-ம் தேதி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர் போட்டி நடத்தும் இடத்துக்கு சென்று காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம், அல்லது கொச்சி நகருக்கு மாற்றப்படலாம் என்று செய்திகள் வந்தன.

வரும் 10-ம் தேதி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தவிர்த்து வரும் 20-ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கெனவே கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருக்கும் நிலையில், பெங்களூரு அணி சென்னையில் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தலாம். இதனால், இந்தப் போட்டி மற்றும் அடுத்து வர இருக்கும் சில போட்டிகளை கொச்சின் அல்லது திருவனந்தபுரத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இது குறித்து கேரள கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஜேயேஷ் ஜார்ஜ் கூறியதாவது:

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இது தொடர்பாக நேற்று இரவு என்னுடன் பேசினார். இன்று பிசிசிஐ, ஐபிஎல் உயர் அதிகாரிகள் அமிதாப் சவுத்ரி, ராஜீவ் சுக்லா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளை மாற்றுவது குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள்.

திருவனந்தபுரம், கொச்சி நகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பமாக இருப்பதாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

கொச்சியில் மிகச்சிறப்பான முறையில் கிரீன்பீல்ட் ஸ்டேடியம் தயாராகி இருக்கிறது. இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த மைதானம் தயாராக இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது.

ஒருவேளை திருவனந்தபுரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும், தமிழர்கள் சாலை மார்க்கமாக எளிதாக வந்து போட்டியைக் காணலாம். ஏறக்குறைய 8 மணிநேரத்தில் திருவனந்தபுரத்தை அடைந்துவிடலாம்.

 இவ்வாறு ஜேயேஷ் ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆனால், ஒரு தனியார் செய்திச் சேனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது என்று கூறியிருப்பதாக செய்தி ஒளிபரப்பாகியதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x