Published : 05 May 2024 07:11 AM
Last Updated : 05 May 2024 07:11 AM

கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பலப்படுத்தும் முனைப்பில் லக்னோ

கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர்

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் ஏகானா மைதானத்தில் 145 ரன்கள் இலக்கை போராடி கடைசி ஓவரிலேயே வெற்றி பெற்றிருந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் சீரான திறனை வெளிப்படுத்தி வருகிறார். மார்கஸ் ஸ்டாயினிஸ் கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதனால் குயிண்டன் டி காக் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் தொடக்க ஆட்டத்தில் அரை சதம் அடித்த நிலையில் அதன் பின்னர் அவரிடம் இருந்து பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இதேபோன்று ஆயுஷ் பதோனியிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான திறன் வெளிப்படவில்லை.

தீபக் ஹூடாவிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படுவது இல்லை. பந்து வீச்சை பொறுத்தவரையில் மயங்க் யாதவ் கடந்த ஆட்டத்தில் மீண்டும் காயம்அடைந்தார். அநேகமாக அவர், இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம்தான். எனினும் மோஷின் கான், யாஷ் தாக்குர்,ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 261 ரன்கள் குவித்த போதிலும் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி அதன் பின்னர் மீண்டு வந்து கடந்த இரு ஆட்டங்களிலும் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த போதிலும் வெங்கேஷ் ஐயர் 70 ரன்களும், மணீஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்து அணியை மீட்டெடுத்தனர். இவர்களது பொறுப்பான பேட்டிங் காரணமாகவே கொல்கத்தா அணியால் 170 ரன்கள் இலக்கை கொடுக்க முடிந்தது. மேலும் அழுத்தமான சூழ்நிலையில் இந்த ஜோடி விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களை வீழ்த்தி பார்முக்கு திரும்பி உள்ளார். வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரும் சீராக விக்கெட்களை கைப்பற்றத் தொடங்கி உள்ளது அணியின் பந்து வீச்சை பலப்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x