Published : 04 May 2024 09:30 PM
Last Updated : 04 May 2024 09:30 PM

1,2,6... குஜராத்தை 147 ரன்களில் சுருட்டிய ஆர்சிபி @ ஐபிஎல் 

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்களைச் சேர்த்துள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் ஓப்பனராக களமிறங்கிய ரித்திமான் சாஹா, சிராஜ் வீசிய 2ஆவது ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட். சாய் சுதர்சன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 61 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

ஷாருக்கான் - டேவிட் மில்லர் இணைந்து சிக்சர்கள் விளாசி ரன்களை உயர்த்த முயன்றனர். 2 சிக்சர்களை விளாசிய மில்லர் 30 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார். அவரைத் தொடர்ந்து ஷாருக்கான் 37 ரன்களில் ரன் அவுட்.

ராகுல் டெவாட்டியா பொறுப்பாக ஆட, ரஷீத் கான் தன் பங்குக்கு ஒரு சிக்சர் அடித்துவிட்டு 18 ரன்களில் நடையைக் கட்டினார். டெவாட்டியாவும் 35 ரன்களில் வெளியேற ஆட்டம் கைவிட்டுப் போனது.

மனவ் சுதர் 1 ரன்னிலும், மோஹித் சர்மா ரன் எடுக்காமலும், விஜய் சங்கர் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டாக 147 ரன்களில் சுருண்டது குஜராத். ஆர்சிபி அணி தரப்பில், வைசாக் விஜய்குமார், முகமது சிராஜ், யாஷ் தயாள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், கர்ண் சர்மா ஆகியோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x