Published : 04 May 2024 07:20 AM
Last Updated : 04 May 2024 07:20 AM

‘கடைசி பந்தில் விக்கெட் கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை’ - பாட் கம்மின்ஸ்

கம்மின்ஸ்

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

201 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தன.

முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் சேர்த்தார். அடுத்த 4 பந்துகளில் ரோவ்மன் பவல் 10 ரன்கள் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோவ்மன் பவல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது ஹைதராபாத் அணி.

ஹைதராபாத் அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

வெற்றிக்குப் பின்னர் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது: இது அற்புதமான ஆட்டம். கடைசி பந்துவரை ஆட்டம் எங்கள் பக்கம் இருந்ததாக நான் நினைக்கவில்லை. இது டி20 கிரிக்கெட், இதில் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதையே பார்த்து பழகியுள்ளோம்.

கடைசி ஓவர் வரும் போது என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று கருதினேன். கடைசி பந்தில் விக்கெட் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மாறாக ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லக்கூடும் என நினைத்தேன்.

ராஜஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர், அதிர்ஷ்டவசமாக நாங்கள் சில விக்கெட்களை வீழ்த்தினோம். ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டோம். அவர்கள் தரமானவீரர்கள், அவர்களுக்கு இப்படி வாய்ப்பு வழங்கக்கூடாது. இவ்வாறு பாட் கம்மின்ஸ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x