

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜாலி ரோவர்ஸ் - ஆழ்வார்பேட்டை அணிகள் மோதின.
எஸ்எஸ்என் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆழ்வார்பேட்டை அணி 40.3 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக என்.எஸ்.ஹரிஷ் 33 ரன்கள் சேர்த்தார். ஜாலி ரோவர்ஸ் அணி சார்பில் சந்திரசேகர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் பின்னர் விளையாடிய ஜாலி ரோவர்ஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. அஜிதேஷ் 58, லக்சய் ஜெயின் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜாலி ரோவர்ஸ் 88.4 ஓவர்களில் 279 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
அஜிதேஷ் 220 பந்துகளில், 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 110 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். துருவ் ஷோரே 38, பாபா இந்திரஜித் 48 ரன்கள் சேர்த்தனர்.
ஆழ்வார்பேட்டை அணி தரப்பில் பிரேம் குமார் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 179 ரன்கள்பின்தங்கிய நிலையில் விளையாடிய ஆழ்வார்பேட்டை அணி 35.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 69, துஷார் ரஹேஜா 31, ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்கள் சேர்த்தனர்.
ஜாலி ரோவர்ஸ் அணி தரப்பில் ராகுல் 4, சந்திரசேகர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜாலி ரோவர்ஸ் அணி பாளையம்பட்டி ராஜா கோப்பையை வென்றது. இந்த கோப்பையை ஜாலி ரோவர்ஸ் அணி வெல்வது இது 23-வது முறையாகும்.