Published : 30 Apr 2024 09:27 PM
Last Updated : 30 Apr 2024 09:27 PM

சோபிக்காத பேட்ஸ்மேன்கள் - லக்னோவுக்கு 145 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

ரோகித் சர்மா | படம்: சந்தீப் சக்சேனா

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 144 ரன்களை சேர்த்துள்ளது.

லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பர்னகளாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர்.

பிறந்த நாளான இன்று ரோகித் சர்மா வெளுத்து வாங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தது தவறு என்பதை உணர்த்தி 2ஆவது ஓவரிலேயே 4 ரன்களில் அவுட்டானார்.

அடுத்த ஓவரில் சூர்ய குமார் யாதவ் 10 ரன்களில் வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 7 ரன்களில் ரன்அவுட். அதே 6ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா டக்அவுட். இப்படியாக 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை 57 ரன்களைச் சேர்த்தது.

இஷான் கிஷன் - நேஹல் வதேரா இணைந்து ரன்களைச் சேர்க்க முயன்றனர். சிறிது நேரம் விக்கெட் இழப்பு இல்லாமல் இருந்த நிலையில், 14ஆவது ஓவரில் இஷான் 32 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

46 ரன்களைச் சேர்த்து அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த வதேராவை போல்டாக்கினார் மொஹ்சின் கான். நபி 1 ரன்களில் கிளம்ப, இறுதியில் டிம் டேவிட்டின் 35 ரன்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்த மும்பை 144 ரன்களைச் சேர்த்தது.

லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான் 2 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக், ரவி பிஸ்னோய், மார்கஸ் ஸ்டோனிஸ், மயங்க் அகர்வால் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x