Published : 30 Apr 2024 10:19 AM
Last Updated : 30 Apr 2024 10:19 AM

9 வீரர்கள் நிச்சயம் எனும் போது டி20 உ.கோப்பையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அரிது!

இன்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழு கூடி டி20 உலகக் கோப்பைக்கான அணித்தேர்வு விவாதம் நடத்துகின்றனர். இதில் ரோஹித், கோலி, ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா, ரிஷப் பண்ட்/சஞ்சு சாம்சன், குல்தீப், ரிங்கு சிங் என்று 9 வீரர்கள் நிச்சயம் தேர்வு என்னும் நிலையில் மீதி 6 வீரர்களுக்காக ஒரு தேர்வுக்குழு கூடுகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் பிரகாசிக்கும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு ஏறக்குறைய கிடையாது என்றே கூறலாம்.

ஸ்டாய்னிஸிடம் அவர் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலேயே இல்லையே என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ‘ஏன்? புது வீரர்கள், திறமையான புதுமுகங்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஆடட்டுமே’ என்றார். அத்தகைய பெருந்தன்மையை ரோஹித்திடமோ, வர்த்தகக் குறி கோலியிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது. டி20 என்பதே புதுமுக வீரர்களின் வரத்துக்களினால் ரசிகர்களிடையே பெற்ற உந்துதலால் பிரபலமடைந்தது, இதில் பழைய குதிரைகள் மீது பந்தயம் கட்டும் ஒரே வாரியம் பிசிசிஐ-யாகத்தான் இருக்க முடியும். காரணம் இங்கு செலக்‌ஷனில் ஸ்பான்சர்கள், வர்த்தகக் கூட்டாளிகளின் செல்வாக்கு அதிகம் உள்ளது என்று கூறப்படுவதே.

ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன் போன்றவர்களுக்கே வாய்ப்புக் கிடைக்காது போலிருக்கிறது. ஐபிஎல் இம்பாக்ட் பிளேயர் விதியினால் இனி ஆல்ரவுண்டர்கள் உருவாவது கடினம். அதனால் ஹர்திக் பாண்டியா தன் ரோலை மீண்டும் வடிவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். பிரதானமாக பவுலர் 7-8 டவுனில் 8-10 பந்துகளி 20-25 ரன்கள் எடுக்கும் வீரர் என்ற நிலைக்கு அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது நலம், இல்லை, நான் பெரிய பேட்டர் ஒன் டவுனில் இறங்குவேன் என்றால் அவர் இந்திய அணியில் இருக்க முடியாது என்ற நிலைதான் இப்போது.

விக்கெட் கீப்பர் பின்னால் இறங்கி விளாசும் தன்மையுடையவராக இருக்க வேண்டும் ஏனெனில் டாப் ஆர்டர் நெரிசலாக உள்ளது என்பதால் சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு கிடைப்பது அரிது. சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3ம் நிலையில் இறங்குகிறார். எனவே அவருக்கும் வாய்ப்பு பிரச்சினையாக உள்ளது, ஆனால் சஞ்சு சாம்சன் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக அடித்து ஆடக்கூடியவர் என்பதால் செலக்டர்ஸ் சஞ்சு சாம்சனைத்தான் தேர்வு செய்வார்கள் என்று ஒரு சில ஊடகங்கள் ஹேஷ்யம் வெளியிட்டுள்ளன.

அதே போல் அருமையாக ஆடிவரும் ஷிவம் துபேயை எடுக்க வேண்டும், அவருக்கு பலவீனங்கள் நிறைய உண்டு. ஆனால் ரிங்கு சிங்கா, ஷிவம் துபேயா என்றால் ஷிவம் துபே பந்து வீசும் வாய்ப்பு உள்ளது என்றால் ஷிவம் துபேயைத்தான் தேர்வு செய்வார்கள், ஆனால் ரிங்கு சிங் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றவர், சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக ஆடுபவர், ஆனால் இருவரையும் எடுக்க முடியாது, இருவரையும் எடுத்தால் ஒரு விக்கெட் கீப்பர் அல்லது ஒரு பவுலரைத் தியாகம் செய்ய வேண்டும்.

ஆகவே பவர் ஹிட்டர்களை அணியில் எடுக்க வேண்டுமெனில் டாப் ஆர்டரான ரோஹித், கோலியில் யாராவது ஒருவர் உட்கார வேண்டும், இது நடக்காது ஏனெனில் ரோஹித் கேப்டன், கோலி இல்லாமல் இவர் இறங்க மாட்டார். ஏனெனில் கோலி ஐபிஎல் போட்டிகளில் தன் அணியை வெற்றி பெற வைக்க முடியாவிட்டாலும் தன் ஸ்கோர்கள் மூலம் மறைமுகமாக ஒரு பிரஷரை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

எனவே கில், கே.எல்.ராகுலுக்கே இடமில்லை எனும்போது எங்கிருந்து அபிஷேக் சர்மா, ஷஷாங்க் சிங், ரியான் பராக், கோலிக்குக் கீழ் ஐபிஎல் அட்டவணையில் இருக்கும் ருதுராஜ், சாய் சுதர்ஷன், திலக் வர்மா பந்து வீச்சில் மயங்க் யாதவ், நடராஜன், செஹல், முகேஷ் குமார், கலீல் அகமது போன்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கப் போகிறது? இந்த முறை டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை எனினும் வென்றாலும் ரோஹித்கள் கோலிகள் டி20-கிரிக்கெட்டை உதறினால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். அவர்கள் முடிவு எடுக்கவில்லையெனில் செலக்டர்ஸ் முடிவு எடுப்பது அவசியம். வீரர்கள் ஏற்படுத்தும் ரசிகர்கள் மட்ட பிரஷர்களுக்கோ, வர்த்தகத் தாக்கத்திற்கோ பிசிசிஐ செலக்டர்ஸ்கள் உட்படக் கூடாது என்பதே கிரிக்கெட் ஆர்வலர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x