Last Updated : 28 Apr, 2024 06:42 AM

 

Published : 28 Apr 2024 06:42 AM
Last Updated : 28 Apr 2024 06:42 AM

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே: ஹைதராபாத்துடன் சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணியுடன் மோதுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலானசிஎஸ்கே அணியானது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் அடுத்தடுத்து இருதோல்விகளை சந்தித்த நிலையில் இன்றையஆட்டத்தை சந்திக்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

தனது கோட்டையான சேப்பாக்கத்தில் கடந்த ஆட்டத்தில் 210 ரன்களை குவித்த போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதேவேளையில் நடப்பு சீசனில் இரு ஆட்டங்களில் 277 மற்றும் 288 ரன்கள் வேட்டையாடிய பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகளை குவித்து பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்துள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 7 ஆட்டங்களில் 133 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் அவர், கடைசி ஆட்டத்தில் தனது இடத்தை இழந்தார். அவருக்கு மாற்றாக கடந்த இருஆட்டங்களிலும் தொடக்க வீரராக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானேவிடம் இருந்தும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. டேரில் மிட்செல்லிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான பங்களிப்பு இல்லை. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 24.33 சராசரியுடன் 146 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் சிஎஸ்கே வீரர்கள் ஒட்டுமொத்தமாக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். கடந்த இரு ஆட்டங்களிலும் 7 ஓவர்களை வீசிய துஷார் தேஷ்பாண்டே 76 ரன்களை தாரைவார்த்தார். மற்றொரு தொடக்க பந்து வீச்சாளரான தீபக் சாஹரும் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. நடு ஓவர்களில் முஸ்டாபிஸூர் ரஹ்மானும், இறுதிக்கட்ட ஓவர்களில் பதிரனாவும் ஆறுதல் அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

நடப்பு சீசனில் முதலில் பேட்டிங் செய்யும்ஆட்டங்களில் அதிரடி பேட்டிங் அணுகுமுறையை கையாண்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவர்பிளே ஓவர்களை சிறந்த முறையில் பயன்படுத்தி ரன்வேட்டை நிகழ்த்தி வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடும். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சோபிக்கத் தவறிய டிராவிஸ் ஹெட், எய்டன் மார்க்ரம், நித்திஷ் ரெட்டி, ஹெய்ன்ரிச் கிளாசன், அப்துல் சமத் ஆகியோர் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

ஆர்சிபி - குஜராத் மோதல்: முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத்- பெங்களூரு மோதுகின்றன. ஷுப்மன் கில்தலைமையிலான குஜராத் 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன்புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

‘சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சுழற்றுவதில்லை’ - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு ஆலோசகரான முத்தையா முரளிதரன் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை சுழற்றுவதில்லை. அவர்கள் பந்துகளை விரைவாக வீசுகிறார்கள். பந்துகளை சுழற்றி வீசவில்லை என்றால், பந்தில் விலகலும் இருக்காது. வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்கள் த்ரோடவுனில் பயிற்சி செய்கிறார்கள். பெரும்பாலான பந்துகள் நேராகவே வரும்.

அதை விளாசி பழக்கப்பட்டுவிடுவதால் போட்டிகளிலும் அதையே செய்கிறார்கள். ஆனால் பந்தில் விலகல் இருந்தால், பேட்ஸ்மேனின் மூளைக்கு அதற்கு எப்படி வினையாற்ற வேண்டும் என்பது தெரியாது. எனவே, சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை எப்படி சுழற்றுவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். சிஎஸ்கே - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் அதிக ரன்கள் குவிக்கப்படக்கூடிய போட்டியாக இருக்கும்.

ஏனெனில் 200 ரன்களுக்கு மேலான இலக்குக்கூட அடையப்படுகிறது. பயிற்சியாளர்களும், வீரர்களும் இம்பாக்ட் பிளேயர் விதியை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். சேப்பாக்கம் ஆடுகளம் உலர்ந்து காணப்பட்டதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் இருக்கும். அப்போது ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும். ஒரு அணி அனைத்து ஆட்டங்களையும் வெல்ல முடியாது, 60 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றாலே நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x