Published : 25 Apr 2024 06:47 AM
Last Updated : 25 Apr 2024 06:47 AM

குறைவான இலக்கை கொடுத்துவிட்டோம்: ருதுராஜ் கெய்க்வாட் வேதனை

ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

211 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டாயினிஸ் 63 பந்துகளில் 124 ரன்களை விளாசி லக்னோ அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைவதற்கு பனிப்பொழிவும் ஒரு காரணியாக அமைந்திருந்தது. லக்னோ அணி ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. குயிண்டன் டி காக் (0), கே.எல்.ராகுல் (16) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில் பார்மின்றி தவித்த தேவ்தத் படிக்கலும் 19 பந்தில் 13 ரன் சேர்த்து நடையை கட்டினார்.

ஆனால் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்டாயினிஸ் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டார்.

அதிலும் தனக்கு வசதியான இடங்களை நோக்கி பந்துகளை விரட்டி ரன் வேட்டையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் 34 ரன்களும் தீபக் ஹூடா 6 பந்துகளில், 17 ரன்களும் விளாசினர். பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை.

இவர்கள் கூட்டாக 4 ஓவர்களை வீசி 37 ரன்களை தாரைவார்த்தனர். முஸ்டாபிஸுர் ரஹ்மான் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட ஸ்டாயினிஸ் அதன் பின்னர் ஹாட்ரிக் பவுண்டரிகளை விரட்டி அணியை எந்தவித சிரமமும் இல்லாமல் வெற்றிக் கோட்டை கடக்கவைத்தார்.

சிஎஸ்கே அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 5-வது வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது.லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்அணியினர் ஆட்டத்தின் பிற்பகுதியில் சிறப்பாக விளையாடி னார்கள்.13 முதல் 14-வது ஓவர் வரை ஆட்டத்தை நாங்கள், எங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் மார்கஸ் ஸ்டாயினிஸ்அற்புதமாக விளையாடினார்.

பனிப்பொழிவும் முக்கிய பங்கு வகித்தது. அதிகஅளவிலான பனிப்பொழிவுஇருந்ததால் அது எங்களது சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தில் இருந்து வெளியே எடுத்து விட்டது. இல்லையெனில் நாங்கள் ஆட்டத்தை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தி ஆழமாக எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் இவை விளையாட்டின் பகுதிகள், அதை கட்டுப்படுத்த முடியாது.

பவர்பிளேவுக்குள் நாங்கள் இரு விக்கெட்களை இழந்துவிட்டால் ரவீந்திர ஜடேஜா 4-வது வீரராக களமிறங்கி பேட்டிங் செய்வார். பவர்பிளேவுக்கு பின்னர் நாங்கள் விக்கெட்டை இழந்தால் ஷிவம் துபே களமிறங்குவார். இது எங்கள்சிந்தனையில் தெளிவாக உள்ளது.உண்மையைச் சொல்வதானால்,நாங்கள் கொடுத்த இலக்கு போதாதுஎன்று நினைத்தேன்.

ஏனெனில் எங்கள் பயிற்சி அமர்வுகளின் போது இதே அளவிலான பனிப்பொழிவு இருந்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. இவ்வாறு ருதுராஜ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x