Published : 22 Apr 2024 06:38 AM
Last Updated : 22 Apr 2024 06:38 AM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.

அந்த அணியின் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். இதனால் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 224 ரன்களை துரத்தி வெற்றி பெற்று சாதனை படைத்தது ராஜஸ்தான்.

முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் மீண்டுமொரு சதத்தை விளாசினார். சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பாவெல் ஆகியோரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுவேந்திர சாஹல் ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்து வருகின்றனர். இதில் சாஹல் 12 விக்கெட்களைச் சாய்த்து எதிரணி வீரர்களை மிரட்டி வருகிறார்.

அதே நேரத்தில் மும்பை அணியானது இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காண அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படும்பட்சத்தில் அது ராஜஸ்தானின் தோல்விக்கு வழிவகுக்கலாம்.

மேலும் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரிடமிருந்து சிறந்தஇன்னிங்ஸ் இதுவரை வெளிப்படவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் சிறப்பாக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே, அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவர் இதுவரை இந்த சீசனில் 13 விக்கெட்களை வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக பும்ரா இருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாக உள்ளது.

ஜெரால்டு கோட்ஸி விக்கெட்களை வீழத்தியபோதிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கிறார். ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அதிக ரன்களை விட்டுத் தருபவர்களாக உள்ளனர்.எனவே, இந்த ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் ராஜஸ்தானுக்கு அது சவால் விடுப்பதாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x