Published : 19 Apr 2024 12:21 AM
Last Updated : 19 Apr 2024 12:21 AM

PBKS vs MI | கடைசி ஓவர் வரை போராடிய பஞ்சாப் - 9 ரன்களில் மும்பை வெற்றி!

இரு அணி வீரர்கள்

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன்களில் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இறுதி ஓவர் வரை இலக்கை எட்ட போராடி இருந்தது அந்த அணி.

முலான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் எடுத்தார். ரோகித் 36 மற்றும் திலக் 34 ரன்கள் எடுத்திருந்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார் ஹர்ஷல் படேல்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டியது. கேப்டன் சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 2.1 ஓவருக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது பஞ்சாப். பிரப்சிம்ரன் சிங், ரூசோவ், சாம் கரன் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர்.

தொடர்ந்து பாட்டியா மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த ஷஷாங் சிங்கும் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் 8-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் அஷுதோஷ் சர்மாவும், ஹர்ப்ரீத் பிராரும்.

28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் அஷுதோஷ் ஆட்டமிழந்தார். 21 ரன்கள் எடுத்த ஹர்ப்ரீத் பிராரும் ஆட்டமிழந்தார். ரபாடா கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அவுட் ஆனார். மும்பை இந்தியன் சார்பில் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் பும்ரா. கோட்ஸியும் 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

19.1 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது பஞ்சாப். அதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பும்ரா வென்றிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x