Published : 18 Apr 2024 11:00 PM
Last Updated : 18 Apr 2024 11:00 PM

நினைவிருக்கா | 2008-ல் தொடங்கிய ஐபிஎல் ஆட்டம்!

முதல் போட்டியில் சதம் விளாசிய மெக்கல்லம்

பெங்களூரு: இதே நாளில் (ஏப்.18) கடந்த 2008-ல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டின் ஐபிஎல் ஆட்டம் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் மெக்கல்லம் ஆடிய அதிரடி ஆட்டத்தின் காரணமாக வாகை சூடியது கொல்கத்தா.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கன் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பஞ்சாப் கிங்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 8 அணிகள் விளையாடின.

முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த சவுரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணிக்காக ஆடிய மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்தார்.

223 ரன்கள் இலக்கை விரட்டிய ராகுல் திராவிட் தலைமையிலான பெங்களூரு அணி 82 ரன்கள் ஆல் அவுட் ஆனது. பிரவீன் குமாரை தவிர அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்திருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மெக்கல்லம் வென்றார்.

2008 சீசனின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான். பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் முதல் சீசனில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த சீசன் முதல் நடப்பு சீசன் வரை ஐபிஎல் ஆடுகளம் எண்ணற்ற மாற்றங்களை கண்டுள்ளது. உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இணைந்து விளையாடும் களமாக ஐபிஎல் உள்ளது. உலக அளவில் நடைபெறும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் ஐபிஎல் சாம்ராட்டாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்களது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய பல இளம் உள்நாட்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x