Published : 18 Apr 2024 09:32 PM
Last Updated : 18 Apr 2024 09:32 PM

சூர்யகுமார் யாதவ் அதிரடி: பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு @ ஐபிஎல் 

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை 192 ரன்களைச் சேர்த்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்களைச் சேர்த்தார்.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பையின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா - இஷாந்த் கிஷன் இணை களம் புகுந்தது.

இஷான் கிஷன் நிலைக்காமல் 8 ரன்களில் 3ஆவது ஓவரிலேயே விக்கெட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட, ரோஹித் சர்மா துணை நின்றார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்த மும்பை 86 ரன்களைச் சேர்த்தது.

சேம் கரண் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசினார் ரோஹித். இதன் மூலம் மும்பையில் அதிக சிக்சர்கள் விளாசியவர்களில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 224 சிக்சர்களை விளாசியுள்ளார்.

இந்த பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதே ஓவரில் 36 ரன்களுக்கு கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். மறுபுறம் சூர்ய குமார் யாதவ் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால், சேம் கரண் வீசிய 17-வது ஓவரில் 78 ரன்களுக்கு சூர்யகுமார் யாதவ் அவுட்டானது அதிர்ச்சி.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டிம் டேவிட் 14 ரன்களில் வெளியேற, ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்களில் கிளம்ப, கடைசி பந்தில் நபி ரன் அவுட் ஆக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை 192 ரன்களைச் சேர்த்தது.

மும்பை அணி தரப்பில் சேம் கரண் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் காகிசோ ரபாடா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x