Published : 05 Apr 2018 04:22 PM
Last Updated : 05 Apr 2018 04:22 PM
மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரராகி விட்ட ஹர்பஜன் சிங் அந்த அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வரும் 7-ம் தேதி மும்பையில் களமிறங்குகிறார்.
இந்த ஆட்டம் தனக்கு உணர்ச்சிகள் ததும்பும் ஆட்டமாக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து பயிற்சிகளுக்கிடையே ஹர்பஜன் கூறியதாவது:
முதல் 10 சீசன்களுக்கு என் தாய் மைதானமாக இருந்தது வான்கடே ஸ்டேடியம், அதில் நான் ஆடிய அணிக்கு எதிராகக் களமிறங்குவது என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சி ததும்பும் போட்டியாகவே அமையும்.
ஆனால் தொழில்பூர்வமான ஒரு வீரர் இவற்றையெல்லாம் கடந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் நானும் எதிர்நோக்குகிறேன்.
இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் அபாரமான சில ஆட்டங்களில் மோதியுள்ளது, இந்தப் போட்டிகளில் என்னை நிரூபிப்பது எனக்கு ஆழமான திருப்தியை அளிக்கும்.
ஒரு சீசன் 2 சீசன் அல்ல 10 ஆண்டுகள் ஆடியிருக்கிறேன், எனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் கிரிக்கெட் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் ஆடியுள்ளதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.
மும்பை அணியின் திட்டமிடுதல் குழுவில் நான் இருந்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் எப்படி அணுகும் என்பது பற்றி எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர்களை வீழ்த்த சிறப்பாக ஆடுவது அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அவர்களை வீழ்த்த ஆட்களிருக்கிறார்கள்.
மிகப்பெரிய ஆட்டம் அது, சென்னை ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT