சுருண்டது கேகேஆர் அணி: சிஎஸ்கே-வுக்கு 138 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

சுருண்டது கேகேஆர் அணி: சிஎஸ்கே-வுக்கு 138 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 137 ரன்களில் சுருண்டது. சிஎஸ்கே பவுலர்கள் ஆதிக்கத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனராக களமிறங்கிய பிலிப் சால்ட் முதல் பந்திலேயே அவுட்டானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 1 ரன் சேர்த்திருந்தது கொல்கத்தா.

சுனில் நரைன் - அங்கிரிஷ் ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் ப்ளே வரை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். சரியாக 7ஆவது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 24 ரன்களுக்கு எல்பிடபள்யூவானார். அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் 27 ரன்களில் நரைன் அவுட். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் கிளம்பியது அணியின் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது.

10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த கொல்கத்தா 70 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. 12வது ஓவரில் ரமன்தீப் சிங் விளாசிய சிக்சர் அணிக்கு தேவையாக இருந்தது. ஆனால் அடுத்த பந்தே அவர் போல்டானது துரதிஷ்டவசம்.

ஸ்ரேயஸ் ஐயர் - ரிங்கு சிங் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை ஏற்ற முயற்சித்தனர். அவர்கள் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போக, துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவரில் போல்டு பறந்தது. ரிங்கு சிங் 9 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த ரஸல் 10 ரன்களில் கிளம்பினார்.

கேப்டன் என்ற முறையில் பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயஸ் ஐயரும் 34 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் ஸ்டார்க் டக் அவுட்டான நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 137 ரன்களைச் சேர்த்தது.

சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், , துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்சனா 1 விக்கெட்டையும், முஸ்தபிஸூர் ரஹ்மான் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in