Published : 08 Apr 2024 05:35 PM
Last Updated : 08 Apr 2024 05:35 PM

“இந்தியாவின் வெற்றி கேப்டன் தோனி” - கவுதம் கம்பீர் புகழாரம்

கம்பீர் மற்றும் தோனி | கோப்புப்படம்

சென்னை: இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி மற்றும் கம்பீர் என இருவரும் தங்களது அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடும் போட்டி என்றால் ஆட்டம் அனல் பறக்கும். இந்த முறை தோனி, சென்னை அணியின் வீரராக விளையாடுகிறார். கம்பீர், கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்படுகிறார்.

“இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன் தோனி என்பது வெளிப்படையான உண்மை. மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். யாராலும் அந்த நிலையை எட்ட முடியாது. வெற்றிக்கு ஒரு ஓவரில் 20 ரன்கள் தேவை என்றால் அதனை எடுத்துக் கொடுக்கும் வல்லமை கொண்டவர் தோனி. ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார்.

அதே நேரத்தில் எனது அணியின் பந்து வீச்சாளர்களை கொண்டு அதற்கு என்னால் சவால் தர முடியும் என நம்புவேன். அவர் களத்தில் ஆக்ரோஷமாக இருக்க மாட்டார். ஆனால், அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பவர் அல்ல. சென்னை போன்ற அணியுடன் விளையாடும் போது கடைசி பந்து வரை நமது வெற்றி என்பது உறுதியாக தெரியாது” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x