Published : 29 Mar 2024 06:08 PM
Last Updated : 29 Mar 2024 06:08 PM

சூர்யகுமார் யாதவ் எப்போது ஐபிஎல் விளையாடுவார்? - வெளியானது அப்டேட்

மும்பை: இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் சூர்யகுமார் யாதவ் மேலும் சில ஐபிஎல் போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தற்போது விளையாடவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவர் காயம் காரணமாக இதுவரை தொடரில் இருந்து பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரரான சூர்யகுமார் யாதவ் இல்லாத நிலையில் பேட்டிங்கில் அந்த அணி தடுமாற்றம் கண்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த நிலையில்தான் சூர்யகுமார் யாதவ் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார் எனவும், அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் சூர்யகுமார் யாதவ் மேலும் சில ஐபிஎல் போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x