Published : 23 Mar 2024 12:05 AM
Last Updated : 23 Mar 2024 12:05 AM

CSK vs RCB | முதல் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே அணி வீரர்கள்

சென்னை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர்.

கோலாகலமாக தொடங்கிய இந்த சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். கோலியுடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த அவர், 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலியும், கேமரூன் கிரீனும் சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அந்த கூட்டணியை தகர்த்தார் முஸ்தாபிசூர் ரஹ்மான்.

தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது ஆர்சிபி அணிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. அனுஜ், 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. சிஎஸ்கே சார்பில் முஸ்தாபிசூர் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது. கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ருதுராஜ், 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரச்சின் வெளியேறினார். ரஹானே 27, மிட்செல் 22 ரன்கள் எடுத்தனர்.

ஷிவம் துபே மற்றும் ஜடேஜா இணைந்து பொறுப்புடன் ஆடினர். இருவரும் 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் பலனாக 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியது சிஎஸ்கே. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே தொடங்கியுள்ளது. துபே, 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா, 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x