Published : 22 Mar 2024 07:59 PM
Last Updated : 22 Mar 2024 07:59 PM

ரஹ்மான் இசை, அக்‌ஷய் நடனம்: சென்னையில் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடனத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் டி20 தொடரின் 17-வது சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்குகிறது.

கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாகவும், புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் எனவும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த சீசனின் தொடக்க நிகழ்வு சென்னையி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடி நிகழ்ச்சி தொடங்கிவைத்தார்.

அவர் பாடும்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பினர். மேலும் வண்ண ஒளிவிளக்குகளால் மைதானமே திருவிழாக் கோலம் பூண்டது. அத்துடன் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், டைகர் ஷெராஃப் மாஸ் என்ட்ரியுடன் நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாடகர் சோனு நிகம் இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினார். முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் சுமார் 15 நிமிடம் நடைபெறும் நிகழ்ச்சியில் சுவீடனின் புகழ்பெற்ற டிஜே அக்ஸ்வெல் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இந்தத் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் காண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x