Published : 26 Feb 2018 06:23 PM
Last Updated : 26 Feb 2018 06:23 PM

பரிசுத்தொகையில் பாகுபாடு வேண்டாமே: ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்றது பிசிசிஐ

19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி சமீபத்தில் உலகக்கோப்பையை வென்றபின் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றது.

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றியையையடுத்து, சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி வீரர்கள், அவர்களை தயார்படுத்திய பயிற்சியாளர், அணியின் மற்ற பயிற்சியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்தது.

இதன்படி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.30 லட்சம், அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம், அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம் பரிசு அறிவித்தது.

ஆனால், பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பின் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனக்கு அளிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூ.50 லட்சம், வீரர்களுக்கு ரூ.30லட்சம், ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் என்பதை ஏற்க முடியாது. அணியின் வெற்றிக்கு அனைவரும் சமமாக உழைத்துள்ளோம். ஆதலால், பரிசுத்தொகையும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வெற்றிக்கு தான் தனிப்பட்ட முறையில் மட்டும் காரணமில்லை என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ பயிற்சியாளர்கள் அனைவருக்கும் சமமான பரிசுத்தொகையாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டு, மற்ற பந்துவீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என பிசிசிஐ வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x