Published : 19 Mar 2024 01:19 PM
Last Updated : 19 Mar 2024 01:19 PM

“சிஎஸ்கே-வின் எதிரி மும்பை இந்தியன்ஸ் மட்டுமல்ல” - கம்பீரை சுட்டிக்காட்டி அஸ்வின் எச்சரிக்கை

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் மட்டும் எதிரிகள் அல்ல. கவுதம் கம்பீர் பயிற்சித் தலைமையில் இருக்கும் கொல்கத்தாவும் தான் எதிரி என்று ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் சேனலில் எச்சரித்துள்ளார்.

ஐபிஎல் ரசிகர்கள் கவுதம் கம்பீரின் சமரசமற்ற தீவிர அணுகுமுறையினாலும் அதன்பாலான அவரது நடத்தையினாலும் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதுண்டு. ஆனால் அஸ்வினோ கவுதம் கம்பீரின் போட்டிக் குணத்தையும் ஆக்ரோஷத்தையும் தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலில் அஸ்வின் கூறியிருப்பதாவது: "யாராக இருந்தாலும் கம்பீர் கவலைப்பட மாட்டார். ‘கொண்டு வாங்கடா’ என்பது போன்ற ஆற்றலைக் கொண்டவர். அவரது இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு அணியின் ரசிகராக இருப்பவர்களுக்கு கவுதம் கம்பீரின் இந்த அணுகுமுறை பிடிக்காது. அவரது நடத்தை காயத்தை ஏற்படுத்தும். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் போது சோராத அவரது இந்த மனநிலை எனக்கு மிகவும் நேசிக்கக் கூடியதாக உள்ளது.

கவுதம் கம்பீர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிலிருந்து கொல்கத்தா அணிக்கு வந்துள்ளார். தலைமைக்குழுவின் ஒருங்கிணைந்த அங்கமாக கம்பீர் விளங்குகிறார். கொல்கத்தாவின் தலைவிதியையே மாற்றியவர் கம்பீர். இவர் தலைமையில்தான் இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா. 3-வது பட்டம் வெல்ல வேண்டும் என்பதற்காக கம்பீரை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிதான் பிரதான எதிரி. இரு அணிகளும் கோப்பையை வெல்வதில் 5-5 என்று சமநிலை வகிக்கின்றனர். 2013-ல் தான் மும்பை இந்தியன்ஸ் முதல் பட்டம் வென்றது. கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளனர். மும்பை இந்தியன்ஸோடு கம்பீர் வந்திருக்கும் கொல்கத்தாவும் சிஎஸ்கேவுக்கு எதிரிதான்.

2012-லேயே சிஎஸ்கே அணிக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தனர் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி. நான் அப்போது சிஎஸ்கேவுக்கு ஆடினேன். சிஎஸ்கே ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் நிலையில் இறுதிப் போட்டியில் எங்களை வெற்றி கொண்டார் கவுதம் கம்பீர். அதுவும் சென்னையில். அப்போது முதல் சிஎஸ்கேவின் எதிரி கொல்கத்தாவும் என்று ஆகிவிட்டது." என்றார் அஸ்வின்.

அவர் குறிப்பிடும் அந்த இறுதிப் போட்டியில் தோனி டாஸ் வென்று தவறாக முதலில் பேட் செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மை ஹஸ்ஸி (54), முரளி விஜய் (42), ரெய்னா (73), தோனி (14) ஆகியோர்களின் ஸ்கோர்களுடன் 190/3 என்று நல்ல ஸ்கோரை எடுத்தது. ஆனால் பேட்டிங் பிட்ச் என்பதால் கொல்கத்தா 19.4 ஓவர்களில் 192/5 என்று வெற்றிகண்டு கோப்பையைத் தட்டிச் சென்றது. கேகேஆர் அணிக்காக அன்று மன்விந்தர் பிஸ்லா 89 ரன்களை விளாச, ஜாக் காலிஸ் 69 ரன்களை விளாசியது பலருக்கும் நினைவிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x