Last Updated : 06 Feb, 2018 07:35 PM

 

Published : 06 Feb 2018 07:35 PM
Last Updated : 06 Feb 2018 07:35 PM

3-0 வெற்றியை நோக்கி இந்தியா: ரிஸ்ட் ஸ்பின் அச்சுறுத்தல், காயங்களுடன் தெ.ஆ; நாளை 3-வது போட்டி

கேப்டவுனில் நாளை (புதன்) இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையே 3-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இது பகலிரவு ஆட்டம் ஆதலால் ஆட்டம் நாளை மாலை இந்திய நேரம் 4.30 மணிக்கு தொடங்குகிறது.

நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் முதன் முதலில் தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-0 என்ற முன்னிலை பெறும் இந்திய அணி. மாறாக தென் ஆப்பிரிக்க மனதில் ஏற்கெனவே ஒயிட்வாஷ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, காரணம் சாஹல், குல்தீப் யாதவ். மேலும் டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ், டி காக் ஆகிய முக்கிய வீரர்களின் காயங்கள் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பிரிட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது.

இதற்கு முன்னர் 1992-93-ல் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 ஒருநாள் போட்டிகளிலும், பிறகு 2011-ல் 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. எனவே நாளை 3வது போட்டியில் இந்தியா வென்றால் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக 3 போட்டிகளில் வென்று முன்னிலை படைத்த சாதனையை நிகழ்த்தும்.

இந்திய அணியை வீழ்த்த வேண்டுமெனில் தென் ஆப்பிரிக்கா 350 ரன்களை எடுக்க வேண்டுமென்பதையே சமீபமாக இந்தியா ஒருநாள் போட்டிகளில் அரிதாகத் தோற்ற போட்டிகள் எடுத்தியம்புகின்றன.

தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மென்கள் இளம் கேப்டன் மார்க்ரம்மின் மனநிலை எதிர்மறைக்குச் சென்று விடாமல் ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. சாஹல், குல்தீப் பந்துகளை மிக மெதுவாக வீசுகின்றனர், அதனை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் பிக் செய்தால்தான் அவர்கள் ஏதாவது இந்தத் தொடரில் சவாலான ரன் இலக்கை நிர்ணயிக்க முடியும்.

விஷன் 2019 என்று உலகக்கோப்பையை வெல்ல அணியைக் கட்டமைக்கும் தொலைநோக்கில் இந்தத் தொடரில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி டுபிளெசிஸ் இன்னிங்ஸ் நீங்கலாக பேட்டிங்கில் பெரிய அச்சுறுத்தலை நிகழ்த்தவில்லை.

ரபாடா கூறுவது போல், “வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு அணி தங்கள் மேல் அதிக கேள்விகளை சுமக்க வேண்டியதில்லை” அந்த நிலையில் வலுவாக இந்திய அணி உள்ளது.

ஹஷின் ஆம்லா இதுவரை 39 ரன்களையே எடுத்துள்ளார், தென் ஆப்பிரிக்க அணி வீழ்ச்சியிலிருந்து மேலெழ ஆம்லாவின் பங்களிப்பு அதிமுக்கியமானது, இதனை அவரும் உணர்ந்திருப்பார்.

குவிண்டன் டி காக் இல்லாததால் அவருக்குப் பதிலாக ஹெய்ன்ரிச் கிளாசன் அணிக்குள் வருகிறார். மார்க்ரம், ஆம்லா தொடக்கத்தில் இறங்க டுமினி 3-ம் நிலைக்கு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. கிளாசன் இன்னும் பின்னால் இறங்குவார் என்று தெரிகிறது. ஆண்டில் பெலுக்வயோவுக்குப் பதிலாக இன்னொரு ஆல்ரவுண்டர் பர்ஹான் பெஹார்டீன் அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளது, நாளை தென் ஆப்பிரிக்கா வென்றால் இந்தியா மீண்டும் 2-ம் இடத்துக்கு வந்து விடும்.

இந்திய அணி வெற்றி பெற்று கொண்டிருப்பதால் ஆடும் 11 வீரர்கள் அணியில் மாற்றமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு ஆவலூட்டும் போட்டியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x