Published : 08 Feb 2018 09:49 PM
Last Updated : 08 Feb 2018 09:49 PM

ஹர்பஜன் சிங் கொண்டாடிய சின்னாளப்பட்டி ரசிகன்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங்குக்கு மிகவும் பிடித்தவராக, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதிய டெஸ்ட் போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இந்தப் போட்டிக்குப் பின் ஹர்பஜனின் பந்துவீச்சில் வசீகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். அப்படி உருவாகியவர்தான் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சரவணன். தற்போது அபுதாபியில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

சமூக ஊடகங்கள் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியபோது, ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில் சரவணன் அவரைத் தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் கிரிக்கெட் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களில் அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்து வந்தார். இது ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங்கை வெகுவாகக் கவர்ந்து அவரின் கவனிப்பைப் பெற்றன.

இதையடுத்து தனது மேலாளர் விக்ரம் சிங்கின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து சரவணனைத் தொடர்ப்புகொள்ளுமாறு  ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். தனது மேலாளர் மூலம் சரவணன் குறித்த விவரங்களை ஹர்பஜன் சிங் அறிந்துள்ளார்.

இதன்பின் திண்டுக்கல் நகரில் பஞ்சாப் , தமிழக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடந்தபோது, பஞ்சாப் அணியில் ஹர்பஜன் இடம் பெற்று இருந்தார்.

அப்போது, திண்டுக்கல் நகருக்கு வந்த ஹர்பஜன் சிங், தொலைபேசியில் சரவணனுக்கு அழைப்பு விடுத்து தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வரவழைத்து சந்தித்துப் பேசினார். அப்போது சரவணன் வேண்டுகோளுக்கு இணங்க அவருடன் புகைப்படமும் ஹர்பஜன் எடுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையிலான நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் ஹர்பஜனுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து சரவணன் செய்தி அனுப்பி இருந்தார். அதை ஹர்பஜன் சிங் பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு ஏராளமானோர் விரும்பினர். அதைத் தொடர்ந்து, ஹர்பஜனின் பந்துவீச்சு குறித்தும், பேட்டிங் குறித்தும் சரவணன் எழுதிய கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஹர்பஜன் ட்விட்டரில் பதிவிட்டு பெருமை கொண்டார். .

ஐபிஎல்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஹர்பஜன் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அப்போது வாழ்த்து தெரிவித்து சரவணன் அனுப்பிய செய்தியையும் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது நட்பை வெளிப்படுத்தினார்.

இது குறித்து சரவணன் கூறுகையில், ''ஹர்பஜன் சிங் சரியாக விளையாடாதபோது, அவர் குறித்த விமர்சனங்கள் ட்விட்டரில் வரும் போது அவர்களுக்கு மிகவும் நாகரிகமான முறையில் பதில் அளித்து வந்தேன். இது அவரை வெகுவாகக் கவர்ந்தது. முதன் முதலில் என்னை ஹர்பஜன் ட்விட்டரில் பின்தொடர்கிறார் என்று செல்போனில் மேசேஜ் வந்ததும் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் கூற முடியாது. எனது மகிழ்ச்சியை நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும், மக்களிடத்திலும் கூறி பெருமை கொண்டேன்'' என்று தெரிவித்தார்.

தமிழருடன் நட்பு பாராட்டிய ஹர்பஜன் இப்போது, தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி புதிய நாயகனாக உருவெடுக்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x