Last Updated : 06 Feb, 2018 08:34 PM

 

Published : 06 Feb 2018 08:34 PM
Last Updated : 06 Feb 2018 08:34 PM

பாக். வீரர்கள் ஓய்வறைக்குள் செல்லவில்லை: நிருபரைத் திருத்திய ராகுல் திராவிட்

உலக சாம்பியன் இளையோர் அணியுடன் மும்பை வந்திற்ங்கிய பயிற்சியாளர் ராகுல் திராவிட், பல்வேறு தரப்பு கேள்விகளுக்கும் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.

பாகிஸ்தான் யு-19 அணி மேலாளர் நதீம் கான், “திராவிடின் செய்கை அருமையானது, திராவிடின் ஆளுமை பற்றிய எங்களது உயர்ந்த மதிப்பை அவரது செயல் உறுதி செய்தது” என்றார். அவர் இவ்வாறு கூறக்காரணம், பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளரை ராகுல் திராவிட் மனம் திறந்து பாராட்டியதே.

இந்நிலையில் நதீம் கானின் கூற்றை வைத்து நிருபர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திராவிட் சென்றார் என்பது போல் கேள்வி எழுப்ப அவரைத் திருத்திய ராகுல் திராவிட், “நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்குச் செல்லவில்லை. அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். நான் அவரை வாழ்த்தினேன், அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியே. நன்றாக வீசினாய் அருமை என்று அவரை வாழ்த்தினேன். சிறந்த திறமைகளைப் பார்ப்பதில் ஒரு உற்சாகம்.” என்று அந்த நிருபருக்கு உண்மை நிலையை விளக்கினார் ராகுல் திராவிட்.

மேலும் அவர் கூறும்போது, “இந்திய வீரர்களின் திறமையை பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் மிகவும் பாராட்டினர். இந்திய இளம் அணி ஆடிய கிரிக்கெட், தங்களை நடத்தி கொண்ட விதம் தங்களுக்கும் ஒரு பெஞ்ச் மார்க் என்று என் பெயரைக் குறிப்பிட்டு பாராட்டி அவர்கள் பேசியுள்ளனர். அவர்கள் மனதார இந்திய அணியை வாழ்த்திய போது நானும் அவர்கள் அணியிலும் சிறந்த திறமைகள் இருப்பதாகப் பாராட்டினேன்.

இந்த வெற்றியை விட அதற்கான செயல்பாங்கு மிகவும் அருமையாக கடந்த 14-16 மாதங்களில் நடந்தது எனக்கு பெரிய திருப்தியை அளிக்கிறது. இந்தத் தயாரிப்பு இந்த உலகக்கோப்பைக்கு மட்டுமானதல்ல, யு-19 வீரர்களை வளர்க்கவும்தான். இந்த வெற்றி அணியாகத் திரண்ட வெற்றியாகும். இறுதிப் போட்டியில் ஆடியது அவர்களுக்கு ஒரு அனுபவம். இவர்கள் இனி ரஞ்சி டிராபியில் சிறப்பாக ஆடி மூத்த இந்திய அணியில் ஆட முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்றார் திராவிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x