Published : 12 Feb 2024 06:27 AM
Last Updated : 12 Feb 2024 06:27 AM

டெஸ்ட் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தை நிரூபித்துவிட்டார் பும்ரா: ரவி சாஸ்திரி பாராட்டு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா நிரூபித்துவிட்டார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம் இந்தியா தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜஸ்பிரீத் பும்ரா, ஆட்டநாயகன் விருதை வென்று இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்தார்.

மேலும், விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகளின் காரணமாக ஐசிசி டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 ஆகிய 3 விதமான ஐசிசி டாப்-10 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் முதல் இடத்தைபிடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையையும் ஜஸ்பிரீத் பும்ரா படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் சிறந்த வீரராகஅறியப்பட்ட பும்ரா, 2016-ல் அறிமுகமாகி ஒருநாள் மற்றும் டி20போட்டிகளில் அற்புதமாக செயல்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அப்போது, அவரால் மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க முடியாதுஎன்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ராதற்போது பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறி வெற்றிகரமான பந்துவீச்சாளராக வலம் வருகிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது: நான் 2018-ல் பயிற்சியாளராக இருந்தபோது ஜஸ்பிரீத் பும்ராவை டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்தேன். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்தபோது முதல் முறையாக அவரை நான் தொலைபேசியில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதுதான் தம்முடைய வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் என்று பும்ரா தெரிவித்தார்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நேரத்தில் அவர் ஒரு சிறந்த வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர் (டி20, ஒருநாள் போட்டி) என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

இருப்பினும் தன்னால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்ற பசியும், தாகமும் அவரிடம் இருந்தது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராக இருங்கள். உங்களை தென் ஆப்பிரிக்கத் தொடரில் அறிமுகப்படுத்துகிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். அதன்படியே அவரை தென் ஆப்பிரிக்கத் தொடரில் அறிமுகம் செய்தோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு பும்ரா மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டின் பந்துவீச்சு துறையையே மாற்றி விட்டார்.

டெஸ்ட் போட்டிகள் மீது அவருக்கு அவ்வளவு ஆர்வமும், அலாதிப்பிரியமும் இருந்தது. அதைத் தனது பந்துவீச்சின் மூலம்நிரூபித்துவிட்டார் பும்ரா. அவர் ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளராக மாறி அனைவரையும் கவர்ந்து விட்டார். இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x