Published : 27 Aug 2014 10:00 AM
Last Updated : 27 Aug 2014 10:00 AM
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் களமிறங்கிய சாய்னா 21-11, 21-9 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் நடாலியா பெர்மினோவாவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் அதிர்ச்சி தோல்வி கண்டார். அவர் 24-26, 21-13, 18-21 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் டீட்டர் டோம்கேவிடம் தோல்வி கண்டார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காஷ்யப், இப்போது முதல் சுற்றோடு வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
மற்றொரு ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராமை எதிர்த்து விளையாடவிருந்த ஜப்பானின் கெனிஷி டாகோ போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜெயராம். அடுத்த சுற்றில் தாய்லாந்தின் டனாங்சாக்கை சந்திக்கிறார் ஜெயராம்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் விஷ்ணு-அபர்ணா பாலன் ஜோடி தங்களின் முதல் சுற்றில் 21-12, 21-14 என்ற நேர் செட்களில் பிரேசிலின் ஹியூகோ ஆர்தசோ-ஃபேபியானா சில்வா ஜோடியை வீழ்த்தியது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணாவ் ஜெர்ரி-அக்ஷய் தேவால்கர் ஜோடி 21-19, 16-21, 22-20 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் யூன் லங்-சுன் ஹெய் லீ ஜோடியைத் தோற்கடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT