Published : 07 Feb 2018 01:42 PM
Last Updated : 07 Feb 2018 01:42 PM
4 முறை உலகக்கோப்பை வாங்கிய பார்வை சவால் இந்திய கிரிக்கெட் அமைப்புக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுகல்கர் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய்க்கு சச்சின் டெண்டுகர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பார்வையற்றவர்கள் இந்திய கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ளனர். கடந்த மாதம் 20-ம் தேதி நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்த சாதனையைச் செய்து இருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் தொடர்ந்து 4-வது முறையாக பார்வை சவால் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இவர்களின் அணிக்கும், கிரிக்கெட் அமைப்புக்கும் இன்னும் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆதலால், பார்வை சவால் இந்திய கிரிக்கெட் அணிக்கும், கிரிக்கெட் அமைப்புக்கும் பிசிசிஐ அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
பார்வை சவால் இந்திய கிரிக்கெட் அணி ஏராளமான சவால்களைச் சந்தித்து, இந்த உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றி அவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இந்த வீரர்களின் திறமையை மதித்து அவர்களுக்கு பிசிசிஐ அமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும். இந்திய அணிக்கும் வீரர்களுக்கு கிடைக்கும் அதே ஆதரவும், சலுகைகளும் பார்வை சவால் வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு பிசிசிஐ அமைப்பு உதவும் என நம்புகிறேன்.
அதுமட்டுமல்லாமல் பார்வை சவால் வீரர்களுக்கு ஓய்வு காலத்தில் ஓய்வுத் தொகையும் அளித்து, அவர்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கு பிசிசிஐ அமைப்பு உதவ வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில் இந்திய விளையாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அத்தியாயம் தொடங்கும்.
ஒவ்வொரு வீரர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதை எப்போதும் மறக்கமாட்டார்கள். கிரிக்கெட் விளையாட்டை உணர்வுபூர்வமாக கொண்டு செல்ல இது வழியாக இருக்கும். இதை செய்வீர்கள் என நம்புகிறேன்.''
இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT