Last Updated : 04 Feb, 2018 04:08 PM

 

Published : 04 Feb 2018 04:08 PM
Last Updated : 04 Feb 2018 04:08 PM

சாஹல், குல்தீப் அபார பந்துவீச்சு: 118 ரன்களில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா

செஞ்சூரியனில் நடந்து வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் சாஹல் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி 118 ரன்களில் ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஹசிம் அம்லா, குயின்டன் டீ காக்  ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் தாங்கள் சந்தித்த முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன்வேகத்தை கூட்டினர். ஓவருக்கு 4 ரன்கள் வீதத்தில் சீராக தென் ஆப்பிரிக்கா சென்றது.

புவனேஷ்குமார் வீசிய 9-வது ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அம்லா 23 ரன்களில் ஆட்டமிழந்தார் அடுத்ததாக கேப்டன் மார்கிரம் களமிறங்கினார்.

இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் டீ காக் 20 ரன் சேர்த்திருந்த போது, பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்துஆட்டமிழந்தார்.

அதன்பின் 13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீச வந்தார். இந்த ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது தென் ஆப்பிரிக்கா. குல்தீப் வீசிய முதல் பந்தில், கேப்டன் மார்கிரம் 8 ரன்களைச் சேர்ந்திருந்தபோது புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த டேவிட் மில்லர் அதே ஓவரின் 5-வது பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனால் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா

ஜோன்டோ, டுமினி ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினர். சாஹல் பந்துவீச்சில் 25 ரன்கள் சேர்த்திருந்தபோது,  ஜோன்டோ ஆட்டமிழந்தார். இதன்பின் தென் ஆப்பிரிக்காவின் சரிவு தொடங்கியது.

அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க  வீரர்கள் நிலைத்து ஆடாமல் வந்த வேகத்தில் வெளியேறினர். 99 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அடுத்த 19 ரன்களுக்குள் மீதிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

117 ரன்னில் இருந்து அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய சோகமாகும்.

டுமினி 25 ரன்களிலும், மோரிஸ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நிலை வீரர்களான இம்ரான் தாஹிர் ரன் ஏதும் சேர்க்காமலும், மோர்கல், ரபாடா ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

32.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x