Published : 26 Jan 2024 05:54 AM
Last Updated : 26 Jan 2024 05:54 AM

அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் சுழலில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டாம் ஹார்ட்லி.

ஹைதராபாத்: எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கட் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 11.5 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவிச்சந்திரன் அஸ்வின் பிரித்தார்.

பென் டக்கட் 39 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில்ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஆலி போப் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தொடர்ந்து ஸாக் கிராவ்லி 20 ரன்னில் அஸ்வின் பந்திலும், ஜோ ரூட் 29 ரன்களில் ஜடேஜா பந்திலும் நடையை கட்டினர். சீராக ரன்கள் சேர்த்த ஜானி பேர்ஸ்டோ 58 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய பென் ஃபோக்ஸ் 4 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதிலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி தனது 31-வது அரை சதத்தைகடந்தார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட டாம் ஹார்ட்லி 23 ரன்களில் ஜடேஜா பந்திலும், மார்க் வுட் 11 ரன்னில் அஸ்வின் பந்திலும் போல்டானார்கள். ரெஹான் அகமது 13 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மட்டையை சுழற்றிய பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள்எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். முடிவில் இங்கிலாந்து அணி 64.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 27 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜாக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில், 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களும் ஷுப்மன் கில் 43 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x