Published : 25 Jan 2024 03:27 PM
Last Updated : 25 Jan 2024 03:27 PM

IND vs ENG முதல் டெஸ்ட் | மீண்டும் ஜொலித்த இந்திய சுழல் பந்துவீச்சு - இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட்

ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

ஓப்பனிங் செய்த ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இணை 55 ரன்கள் வரை தாக்குப் பிடித்தது. 35 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட்டை ஆட்டமிழக்க செய்து இந்தியாவின் விக்கெட் வேட்டையை தொடங்கி வைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். சில மணித்துளிகளில் ஜாக் கிராவ்லியையும் (20 ரன்கள்) அஸ்வின் தனது சூழலால் வீழ்த்த, ஜடேஜா தன் பங்குக்கு ஆலி போப் (ஒரு ரன்), அக்ஸர் தன் பங்கிற்கு ஜானி பேர்ஸ்டோ (37 ரன்கள்) என வீழ்த்தி இங்கிலாந்துக்கு தொடக்கத்தை அதிர்ச்சிகரமாக மாற்றினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டை 29 ரன்களில் காலி செய்தார் ஜடேஜா. விக்கெட் சரிவுகள் இருந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் என இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் கடைசி விக்கெட்டாக பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

ஸ்டோக்ஸ் 70 ரன்கள் உதவியுடன் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும், அக்ஸர் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x