Published : 12 Feb 2018 10:24 AM
Last Updated : 12 Feb 2018 10:24 AM
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பங்குதாரராக முத்தூட் நிதி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அணியும் ஜெர்சியின் மீது முத்தூட் நிதி நிறுவனம் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். இத்தகவலை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தூட் குழுமத்தின் துணை மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர் ஜார்ஜ் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, “இந்தியாவில் அதிக அளவு மக்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொடர் பெரிய அளவிலும் சிறப்பானதாகவும் அமைந்துள்ளது. ஏற்கெனவே முத்தூட் குழுமம் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்களிப்பு செய்து வருகிறது. புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.
ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே டெல்லி அணிக்கு 4 ஆண்டுகள் ஸ்பான்சராக இருந்துள்ளோம். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப் பூர்வமான பங்குதாரராக முத்தூட் குழுமம் செயல்பட உள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையில் செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளோம்” என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “கடந்த 130 ஆண்டுகளாக வர்த்தகப் பணியில் ஈடுபட்டுள்ள முத்தூட் நிதி நிறுவன குழுமத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் 4500-க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களை முத்தூட் குழுமம் கொண்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் எளிதில் பிரபலமாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT