Published : 02 Feb 2018 02:02 PM
Last Updated : 02 Feb 2018 02:02 PM
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தவுடன், அவரின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு தனது பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"ரொமான்டிக் ஜோடி"யாக விராட் கோலி, அனுஷ்கா சர்மா வலம்வந்து கொண்டு இருக்கிறார்கள். இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவர்களின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டர்பன் நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி அபாரமாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
விராட் கோலி வெற்றி சதம் அடித்தவுடன், தன்னுடைய கணவரை புகழ்ந்து அனுஷ்கா சர்மா 3 விதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
விராட் கோலி பேட் செய்வது போலவும், சதம் அடித்தபின் அவரின் மகிழ்ச்சியையும், இந்தியா வெற்றி பெற்ற காட்சியையும் அனுஷ்கா பதிவிட்டார். அத்துடன், ஆங்கிலத்தில் "வாட் ஏ கை" (What a guy!) என்று அனுஷ்கா கோலியைப் புகழந்து, அன்பின் வெளிப்பாடாக "ஹாட்டின்" குறியீட்டை பதித்து புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் அடித்த 33-வது சதமாகும். தென் ஆப்பிரிக்காவில் அடித்த முதல் ஒருநாள் போட்டி சதமாகும்.
விராட் கோலியும் சதம் அடித்தபோது, அனுஷ்காவை நினைக்க மறக்கவில்லை. செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விராட் கோலி 150 ரன்களை எட்டினார். அப்போது, தனது ஹெல்மட்டை கழற்றி, தனது கழுத்தில் இருந்த சங்கிலியையும், கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தையும் முத்தமிட்டு அனுஷ்காவுக்கு தனது அன்பை கோலி வெளிப்படுத்தினார். இந்த புகைப்படமும் ரசிகர்களால் பகிரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT