Published : 12 Jan 2024 06:51 AM
Last Updated : 12 Jan 2024 06:51 AM

மலேசிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக் - ஷிராக் ஜோடி

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதினார். இதில் காந்த் 13-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது 36-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் லூகாஸ் கோர்வி, ரோனன் லாபர் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாட்விக்-ஷிராக் ஜோடி 21-11, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் இந்திய ஜோடியானது தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹீ ஜி டிங், ரென் ஜியாங் ஜோடியுடன் மோதுகிறது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடியும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஜோடி தங்களது 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜப்பானின் வகானா நாகஹாரா, மயூ மட்சுமோட்டோ ஜோடியை 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x