Published : 02 Jan 2024 08:43 PM
Last Updated : 02 Jan 2024 08:43 PM

“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” - ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: "என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது" என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. போட்டிக்கு தொடங்குவதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து விரிவாக பேசினார். ரோகித் பேசுகையில், "நான் நேர்மையாக சொல்கிறேன், என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது. டெஸ்ட் கிரிக்கெட் பார்மெட்டில்தான் சிறந்த வீரர்கள் விளையாடுவதை பார்க்க முடியும். ஆனால், ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினைகள் உள்ளன. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து எனக்கு தெரியாது.

என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நாடுகளுக்கும் இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை அழகாகவும் பொழுதுபோக்காகவும் வைத்திருப்பதை உறுதி செய்வது அனைத்து நாடுகளின் பொறுப்பும் கூட" என்று பேசினார்.

பின்னணி என்ன? - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுவரை சர்வதேச போட்டிகளில் களமிறங்காத நெய்ல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் நடைபெற உள்ள எஸ்ஏ டி20 லீக்கில் விளையாட உள்ளனர். இந்த தொடரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து ஐபிஎல் முதலீட்டாளர்கள் நடத்துகின்றனர். இந்த தொடர் நடைபெறும் நேரத்தில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. இதனால் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு 2-ம் தர வீரர்களை உள்ளடக்கிய அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

மேலும் எஸ்ஏ 20 லீக்குடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்ற விதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இதுவும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெறாததற்கு காரணமாக கூறப்படுகிறது.

முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயலை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்த்துள்ளனர். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயலை கடுமையாக சாடியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாஹ், "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கவலைப்படவில்லை. நான் நியூஸிலாந்து அணியில் இருந்தால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன். அவர்கள் ஏன் விளையாடுகிறார்கள் எனத் தெரியவில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட் அழிவுக்கான தருணமாக இருக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய வாரியங்கள் ஐசிசியுடன் சேர்ந்து கிரிக்கெட்டின் தூய்மையான வடிவத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும். லாபங்களை மட்டும் வரையறுக்கும் அளவு கோலாக நின்று நாம் அனுமதித்தால், டான் பிராட்மேன், டபிள்யூ.ஜி.கிரேஸ், சோபர்ஸ் போன்றவர்களின் மரபு நியாயமற்றதாகி விடும்" என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x