தவறுக்கு பொறுப்பு யார்?- தெ.ஆப்பிரிக்காவை சாடிய ஹர்பஜன் சிங்

தவறுக்கு பொறுப்பு யார்?- தெ.ஆப்பிரிக்காவை சாடிய ஹர்பஜன் சிங்
Updated on
1 min read

இந்தியா - தெ.ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜோகன்னஸ்பர்கில் இப்படி ஓர் ஆடுகளத்தை கேட்டது யார்? ஐசிஎஸ்ஏ தானே அதற்கு பொறுப்பு. எங்கள் வீரர்கள் இப்படி ஒரு களத்தைக் கேட்கவும் இல்லை; அவர்கள் விளைடாடியபோது ஆடுகளம் சரியில்லை என எந்தப் புகாரும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க அணி இப்போது விளையாட வேண்டாம் என முடிவு செய்துவிட்டது.. பிட்ச் சரியில்லாததற்கு பொறுப்பு யார்? போட்டி தொடர வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

நடந்தது என்ன?

ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

இதில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதையடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) 241 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது.

தொடக்க வீரரான மார்க்ரம் 7 பந்துகளில், 4 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில், பார்த்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹசிம் ஆம்லா களமிறங்கினார். பும்ரா வீசிய 9-வது ஓவரின் 3-வது பந்து டீன் எல்கரின் ஹல்மெட்டை தாக்கியது. ஷாட் பிட்ச்சாக வீசப்பட்ட இந்த பந்தை டீன்எல்கர் தடுத்தாட முயன்றிருந்தார்.

பந்து தாக்கியதை தொடர்ந்து டீன் எல்கர், உடனடியாக நெற்றி பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஐஸ் பேக் சிகிச்சை பெற்றார். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11, ஆம்லா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கணிக்க முடியாத வகையில் பந்துகள் எகிறி வந்த நிலையிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர். எனவே ஒரே ஒரு பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் சற்று வியப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்து மேட்ச் ரெப்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே இரு அணி வீரர்களும் களத்தில் இருந்து வெளியேறினர். பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in