Published : 07 Jan 2018 10:26 AM
Last Updated : 07 Jan 2018 10:26 AM

டெல்லி அணியுடன் சென்னையின் எப்சி இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, டெல்லி டைனமோஸ் எப்சி அணியை எதிர்கொள்கிறது.

டெல்லி அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்த நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்திய நம்பிக்கையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. அந்த அணி 7 ஆட்டங்களில் ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அதேவேளையில் வலுவான சென்னையின் எப்சி அணி 8 ஆட்டத்தில், 5 வெற்றி, ஒரு டிரா, இரு தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கடைசியாக கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டிருந்தது. சொந்த மண்ணில் இன்று வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்குகிறது.

ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எல்லைக் கோட்டு விதிகளை மீறியதால் பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு 3 ஆட்டங்களில் தடையும் ரூ.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதால் உதவிப் பயிற்சியாளர் சையது சபீர் பாஷா முன்னிலையில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. தடை காரணமாக கேப்டன் ஹென்றிக் சேரேனோவும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதுகுறித்து சபீர் பாஷா கூறும்போது, “சேரேனோவுக்கு மாற்று வீரரை களமிறக்குவது கடினமான பணி. அவர் இல்லாத ஆட்டம் சோதனையாகவே இருக்கும். எனினும் சவாலுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x