Published : 14 Dec 2023 05:40 PM
Last Updated : 14 Dec 2023 05:40 PM

“நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யார் தடுக்க முடியும்?” - மொகமது ஷமி

புது டெல்லி: “நான் பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும். இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா?” என உலகக் கோப்பை தொடரில் வைரலான வீடியோ குறித்து இந்திய வீரர் மொகமது ஷமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

5-ஆவது விக்கெட்டை வீழ்த்திய ஷமி, உற்சாக மிகுதியில் மண்டியிட்டு தனது இரு கைகளாலும் தரையை தொடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள், ‘வெற்றிக் கொண்டாடத்தில் முகமது ஷமி மைதானத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பினார். ஆனால், எதிர்ப்புகளுக்கு அஞ்சி பின்வாங்கினார்’ என கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்துள்ள ஷமி, “நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்?. மற்றவர்களின் பிரார்த்தனையை நான் தடுக்க மாட்டேன். எனக்கு பிரார்த்திக்க வேண்டும் என தோன்றினால் நான் அதைச் செய்வேன். அதில் என்ன பிரச்சினை இருக்கிறது?. நான் ஒரு முஸ்லிம் என சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். நான் இந்தியன் என்று பெருமையுடன் சொல்வேன். அதில் என்ன பிரச்சினை?” என்றார்.

மேலும் பேசிய அவர், “நான் யாரிடமாவது பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா?. நான் பலமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். நான் எங்கே சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லுங்கள். நான் அங்கே சென்று பார்த்தனை செய்கிறேன்” என்று ஷமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x