Published : 31 Jan 2018 09:10 AM
Last Updated : 31 Jan 2018 09:10 AM
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்ற வாண்டரர்ஸ் ஆடுகளம் மோசம் என ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த ஆடுகளத்தில் பந்துகள் கணிக்க முடியாத அளவில் எகிறி வந்ததால் பேட்ஸ்மேன்கள் அடிவாங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்ஸில் பும்ரா வீசிய பவுன்சர் டீன் எல்கரின் ஹெல்மட்டை பதம் பார்த்தது.
இதனால் 3-வது நாள் ஆட்டம் சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களையும் மேட்ச் ரெப்ரி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நடத்தப்பட்டது. அப்போது கடைசி செஷனில் பந்துகள் மீண்டும் கணிக்க முடியாத வகையில் எகிறி வந்தன. இதனால் ஆடுகளம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐசிசி நடுவர் ஆண்டி பைகிராப்ட், ஆடுகளத்தை ஆய்வு செய்து மோசம் என அறிக்கை அளித்துள்ளார். அத்துடன் 3 டிமெரிட்ஸ் புள்ளிகளையும் வழங்கி உள்ளார்.
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் 5 புள்ளிகளை பெற்றால் ஒரு வருடம் போட்டியை நடத்த தடைவிதிக்கப்படும். இதனால் தற்போதைக்கு தடையில் இருந்து வாண்டரர்ஸ் ஆடுகளம் தப்பி உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற டெஸ்ட்டில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஒட்டுமொத்தமாக 286 ஓவர்கள் வீசப்பட்ட இந்த ஆட்டத்தில் 805 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் 40 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT