Published : 12 Nov 2023 05:18 PM
Last Updated : 12 Nov 2023 05:18 PM

''தோற்கடிக்க முடியாமலேயே இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்'' - விவ் ரிச்சர்ட்ஸ்

விவ் ரிச்சர்ட்ஸ்  | கோப்புப்படம்

2023 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இந்தியா ஆடி வரும் நிலையில், இந்திய அணி இதே அதிரடி தன்னம்பிக்கையை தக்கவைத்து எது நடந்தாலும் தாக்குதல் ஆட்டம் ஆடி ஐசிசி 2023 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று மே.இ.தீவுகள் லெஜண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

இதுவரை எந்த ஒரு உலகக் கோப்பையிலும் இல்லாதவாறு இந்திய அணி தோற்கடிக்கப்பட முடியாத இரும்புக் கோட்டையாக தங்களை அரண் அமைத்துக் கொண்டுள்ளது. 2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியிலும் இறுதிப் போட்டியிலும் தோற்று இடையில் அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. அதை விட இந்தத் தொடரில் எந்த அணியையும் விட்டு வைக்காமல் அதிரடி பேட்டிங், அட்டாக்கிங் பவுலிங் என்று அசத்தி வருகின்றது.

மே.இ.தீவுகள் 1975, 1979 உலகக் கோப்பைகளை வென்று 1993-ல் கபில்ஸ் டெவில்ஸ் அணியிடம் தோற்றது. ஆஸ்திரேலிய அணி 1987, 1999, 2003, 2007, 2015 என்று 5 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது, இப்போது இந்திய அணி 3வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகக் கைகூடியுள்ளது.

இந்நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ், இந்தியா இதே போல் அட்டாக்கிங் மனநிலையுடன் ஆட வேண்டும், என்ன வந்தாலும் எது நடந்தாலும் இந்த மனநிலையை விட்டு விடக்கூடாது; எதிர்மறை மனநிலைகளை தலைத்தூக்க அனுமதிக்கக் கூடாது. 1983, 2011க்குப் பிறகு, அதாவது கபில் தேவ், தோனிக்குப் பிறகு ரோஹித் சர்மா கோப்பையை தூக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

“தோல்வியடையாமல் தொடர் வெற்றிகளுடன் கோப்பையை வெல்வதை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் இந்திய அணியின் எண்ணமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அந்த அணியின் ஓய்வறையில் இருந்தேன் என்றாலும் இதே மனநிலையைத்தான் கொண்டிருப்பேன். அவர்கள் அனைத்து விதமான அட்டாக்கிங் சிந்தனைகளுடன் இறங்கி ஆட வேண்டும்; விடக்கூடாது.

ஆக்ரோஷமான அணுகுமுறை இந்தியர்களுக்கு இதுவரை திறம்பட வேலை செய்துள்ளது. இத்தகைய மனநிலையிலிருந்து கீழே இறங்கினால் ஏதாவது தவறு நிகழ்ந்து விடும். அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதி வரை இருப்பார்கள் என்றே நம்புகிறேன். இதற்காகத்தான் அவர்களும் முயற்சி செய்கிறார்கள்.

‘இது வரை நன்றாக ஆடிவிட்டோம். எனவே ஏதோ ஒரு கட்டத்தில் மோசமான ஆட்டம் வந்தே தீரும் என்ற பயம் ஏற்படலாம். இத்தகைய எதிர்மறை சிந்தனைகளை மனதிலிருந்து அறவே களைந்து நெகெட்டிவ் எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்” என்று விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகிறார்.

விவ் ரிச்சர்ட்ஸ் கூறுவதுதான் இந்திய அணியினரின் எண்ணமாக இருக்கும் போல் தெரிகிறது. அதனால்தான் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராகக் கூட அணியை மாற்றாமல் அதே அணிச்சேர்க்கையுடன் ஆடிவருகின்ரனர். ரோஹித் சர்மா ஷுப்மன் கில் அதிரடித் தொடக்கம் கொடுத்துள்ளனர். இந்த அருமையான நடைமேடை விராட் கோலி 50வது உலக சாதனை சதத்தை எட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x