Published : 06 Nov 2023 03:08 PM
Last Updated : 06 Nov 2023 03:08 PM

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஊழல் குற்றச்சாட்டு - இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பும் பின்னணியும்

கொழும்பு: உலகக் கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளது அந்நாட்டு அரசு.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இலங்கை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்தே இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு அமையும் என்ற நிலை உள்ளது.

கடந்த வாரம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களுக்கு சுருண்ட இலங்கை, 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு பிறகு இலங்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வீரர்கள் மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவும் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு இலங்கை ரசிகர்கள் அணி மீது வெறுப்பை வெளிப்படுத்தினர். அதிகப்படியான எதிர்ப்புகளை அடுத்து கொழும்பில் உள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு வெளியே பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே, இன்று டெல்லியில் நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடிவரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா அறிவித்துள்ளார். மேலும், நிர்வாக பணிகளை கவனிப்பதற்காக, 1996-ல் இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழுபேர் கொண்ட இடைக்கால குழு ஒன்று நியமித்து அறிவித்துள்ளது இலங்கை அரசு. இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவின் சகோதரரும் , தற்போதைய இலங்கை கேபினெட் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கா கடந்த ஆகஸ்ட்டில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, "1996 உலகக் கோப்பை வெற்றி இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய சாபம். ஏனென்றால், இதன்பிறகே கிரிக்கெட் வாரியத்தில் நிறைய பணம் புழங்கத் தொடங்கியது. அந்தப் பணத்தை திருட விரும்பியவர்களும் வாரியத்தில் பதவி வந்தனர்" என வெளிப்படையாக பேசினார்.

அவரைப் போல சமீப காலமாகவே இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திவருகிறார் அந்நாட்டு விளையாட்டு அமைச்சரான ரோஷன் ரணசிங்கா. கடந்த மாதம், கிரிக்கெட் வாரிய ஊழலை விசாரிக்க மூன்றுபேர் கொண்ட விசாரணை குழுவையும் இதே ரணசிங்கா அமைத்தார். இந்த விவகாரம் ஐசிசி வரை சென்றது. இதன்பின் இந்தியா உடனான இலங்கையின் படுதோல்விக்கு பின் அதே ஐசிசிக்கு கடிதம் எழுதிய ரணசிங்கா, அக்கடிதத்தில் "வீரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள், நிர்வாகத்தில் இருக்கும் ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் ஆகியவற்றால் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடுமாறிவருகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசுகையில், "இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இரண்டாவது உயர் அதிகாரியாக கருதப்பட்ட, செயலாளர் மொஹான் டி சில்வா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு மத்தியில்தான் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் ரணசிங்கா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x